முதல்வருக்கு முன்னதாக வந்த அமைச்சரை துரத்தியடித்த மக்கள் - வைரலாகும் வீடியோ
முதல்வருக்கு முன்னதாக வந்த அமைச்சரை துரத்தியடித்த மக்களின் ஆவேச வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் அங்கு சென்று இருக்கிறார். முன்னதாக முதல்வர் இன்று பார்வையிடுவதற்கு முன்பே நேற்று தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் கீதாஜீவன் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட சென்றிருக்கிறார்.
கடந்த ஒரு வாரமாக மழை நீரில் அவதிப்பட்டு வரும் நிலையில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் யாரும் வந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படி இருக்கும்போது முதல்வர் வருகிறார் என்று தெரிந்ததும் முன்னதாக ஆய்வுக்கு வந்த அமைச்சர் மீது கடும் கோபம் கொண்டார்கள் அப்பகுதி மக்கள்.
திருச்செந்தூர் சாலையில் அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில் சிவந்தாகுளம் பகுதியில் ஒரு வாரமாக தேங்கியிருக்கும் வெள்ளத்தை அதிகாரிகளோ, அரசியல்வாதி ஒருவர் கூட வந்து சரி செய்யவில்லை. இதனால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் . அமைச்சர் வருகிறார் என்று தெரிந்ததும் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்க கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் நடைபெற்ற இடத்துக்கு சிறிது நேரத்துக்கு முன்னரே அமைச்சர் காரை நிறுத்தி விட்டார்.
சாலை மறியல் நடைபெற்றது இடத்திற்கு சிறிது தூரத்துக்கு முன்னரே அமைச்சரின் கார் நின்று விட்டது. அவருடன் வந்த மற்ற கார்களும் நின்றுவிட்டன. மறியல் நின்றதும் செல்லலாம் என்று அமைச்சர் காத்திருந்தார். ஆனால் மறியலில் ஈடுபட்ட இளைஞர்கள் பலரும் , ஆம்புலன்ஸ் வந்தா மட்டும் இடம் கொடுங்கள். வழிவிடுங்க. அமைச்சர் போவதற்கு வழி கொடுக்காதீங்க என்று உறுதியாக நிற்க, இதை புரிந்துகொண்ட அமைச்சரின் கார் முன்னால் செல்ல வழியில்லாமல், திரும்பி முன்பக்கமாக செல்ல வழியில்லாமல் , பின்னாலேயே வெகு தூரத்திற்கு சென்றது.
இதை சிலர் வீடியோவாக எடுத்து வலைத்தளங்களில் வெளியிட அது வைரலாகி வருகிறது.