பாஜகவை கண்டிக்க முடியாமல் கையை பிசையும் ஓபிஎஸ்-இபிஎஸ்
பாஜக செய்த காரியத்தால் அக்கட்சியை கண்டிக்க முடியாமல் கையை பிசைந்து நிற்கின்றனர் இபிஎஸ் ஓபிஎஸ் இருவரும். தங்களுக்குள் எழுந்திருக்கும் அதிகாரப் போட்டியால் தான் துணிந்து பாஜகவை கண்டிக்க முடியாமல் கையை பிசைந்து நிற்கிறார்கள் என்கிறது அதிமுக வட்டாரம்.
கூட்டணி கட்சியிலிருந்து விலகி வந்துசேர நினைப்பவரை அந்த கட்சியில் உறுப்பினராய் சேர்த்துக் கொள்ள தயங்குவார்கள். இன்னும் சொல்லப்போனால் சேர்த்துக் கொள்ளவே மாட்டார்கள். இதனால் கூட்டணிக்கு பாதகம் ஏற்பட்டுவிடும் என்று அந்த செயலை செய்யத் துணிய மாட்டார்கள். ஆனால் பாஜகவோ அதிமுகவில் வழிகாட்டி குழு உறுப்பினரும் முன்னாள் எம்எல்ஏவுமான மாணிக்கத்தை பாஜகவில் இணைத்துக் கொண்டிருக்கிறது.
ஓ. பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளர் மாணிக்கம். ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கியபோது அவரிடம் வந்த முதல் எம்எல்ஏ மாணிக்கம்தான். அதனால் தான் வழிகாட்டி குழுவில் அவரை உறுப்பினராக சேர்த்தார் பன்னீர்செல்வம். வழிகாட்டு குழுவில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் ஆதரவாளர்கள் இருவரும் சமநிலையில் உள்ளனர்.
நேற்று எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் நேற்று முன்தினம் வழிகாட்டு குழுவின் உறுப்பினராக இருக்கும் தனது ஆதரவாளர் ஜேசிடி பிரபாகரை மட்டும் அழைத்துக்கொண்டு ஆளுநரை ஓபிஎஸ் சந்தித்து பேசியது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அது நேற்றைய கூட்டத்தில் பூதாகரமாக வெடித்தது.
இந்த நிலையில் வழிகாட்டி குழுவிலிருந்த ஓபிஎஸ் ஆதரவாளர் பாஜகவில் இணைந்ததும் அதிமுகவில் பூதாகரமாக வெடித்தது. கூட்டணியில் இருந்து கொண்டே இப்படி செய்யலாமா என்று அதிமுகவினர் பாஜகவை கடுமையாக அர்ச்சித்தனர். ஆனாலும் தலைமை மௌனமாகவே இருந்தது .
கூட்டணிக்குள் இப்படி குழப்பத்தை ஏற்படுத்தலாமா? என்று பாஜகவை கண்டிக்க முடியாமல் ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரும் கையை பிசைந்து நிற்பதற்கு , அவர்களுக்குள் நிலவும் அதிகார போட்டியால் கட்சிக்குள் நிலவும் குழப்பம்தான் காரணம் என்கிறது அதிமுக வட்டாரம்.