அதுவரைக்கும் ஓபிஎஸ், அவரது மகன் மீதான விசாரணைக்கு தடை

 
ஒப்ச்

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் ஆகியோர் மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

 நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் போடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் தேனி நாடாளுமன்றத் தொகுதி எம்பியுமான ரவீந்திரநாத் கடந்த 2009ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட போது வேட்பு மனுவில் சொத்து விபரங்களை மறைத்தும் தவறான தகவல்களை தெரிவித்து இருந்ததாகவும் சொல்லி ,  அதனால் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேனி எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

ஹ்

 தேனி மாவட்ட திமுக முன்னாள் நிர்வாகி மிலானி இந்த வழக்கு தொடர்ந்திருந்தார்.   இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்றம் பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் எம்பி மீதான புகார்கள் மீது விசாரணை நடத்தி பிப்ரவரி 7ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. 

 இதன் பின்னர் தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பன்னீர்செல்வம் அவரது மகன் ரவீந்திரநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.   நீதிபதி நிர்மல்குமார் முன்பு இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன.

 அப்போது காவல்துறையினர் இந்த வழக்கில் சம்மன் அனுப்ப வாய்ப்பு இருப்பதால் இந்த வழக்கின் விசாரணைக்கு  தடை தடை விதிக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் , ரவீந்திரநாத் தரப்பில் வாதிடப்பட்டது.   காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டிருந்தது.

 இந்த நிலையில் இந்த மனு தொடர்பாக காவல்துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை பிப்ரவரி 1ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார் நீதிபதி நிர்மல்குமார்.   அதுவரைக்கும் இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டார்.