வருத்தம் தெரிவித்தார் நாஞ்சில் சம்பத்
தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகவும், புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராகவும் பதவி வகித்து வரும் தமிழிசை சவுந்தரராஜன் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் ஆவார். அவர் தமிழக பாஜக தலைவராக இருந்தபோது, அப்போது டிடிவி தினகரன் ஆதரவாளராக இருந்த நாஞ்சில் சம்பத் விமர்சித்துப் பேசியதாக பாஜகவினர் கொதித்தெழுந்தனர். நாஞ்சில் சம்பத்தை முற்றூகையிட்டனர்.
இதையடுத்து நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை எல்லாம் ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நாஞ்சில்சம்பத் வழக்கு தொடர்ந்தார்.
பாஜகவினர் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி என் சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நாஞ்சில்சம்பத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தனிப்பட்ட முறையில் அந்த தலைவரை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை . அவர் பரப்பும் கொள்கைக்கு எந்த ஆதரவும் கிடையாது. அத்தகைய தலைவரை பின்பற்றும் எவருக்கும் பயன் கிடையாது என்றுதான் விமர்சித்த என் பேச்சால் அவர் மனம் புண்பட்டிருந்தால், அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறப்பட்டிருக்கிறது.
ஆனால், நாஞ்சில்சம்பத் தாக்கல் செய்த இந்த மனுவை ஏற்று வழக்குகளை ரத்து செய்யக் கூடாது என்று வழக்கை விசாரிக்க கோரி பாஜக வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து வழக்கு மறு விசாரணையை 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி சதீஷ் குமார்.