அங்கே தான் பேரம் படிந்ததா? முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக கேள்வி

 
s

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் இருபத்தி ஒரு பொருட்கள் அடங்கிய பொங்கல் பை தொகுப்பினை தமிழக அரசு இலவசமாக வழங்கி வருகிறது .   பல இடங்களில் இருபத்தி ஒரு பொருட்களுக்கு பதிலாக 18 பொருட்கள் தான் இருக்கின்றன என்று மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

 இது ஒருபுறமிருக்க பொங்கல் பரிசு பொருட்கள் வட இந்தியாவில் கொள்முதல் செய்யப்பட்டது ஏன்? தமிழ் தமிழர் என்று குரல் கொடுத்துவரும் திமுக ஏன் வட இந்தியாவில் கொள்முதல் செய்தது? என்று கேள்வி எழுப்பி இருக்கிறது பாஜக.  மேலும் இருபத்தி ஒரு பொருட்கள் என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் பாஜக கேட்டுக் கொண்டிருக்கிறது.

pon

இதுகுறித்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி,   ‘’தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழகத்தில் தயாரிப்போம் என்றெல்லாம் குரல் கொடுத்த திமுக அரசு, பொங்கல் பையுடன் வழங்கப்படும் 21 பொருட்களில் பெரும்பாலானவற்றை தமிழகத்தில் தயாரிக்கும் நிறுவனங்களிடத்தில் வாங்காமல் குஜராத் உள்ளிட்ட வெளிமாநில நிறுவனங்களிடத்தில் வாங்குவதன் மர்மம் என்ன? உப்பை மட்டும் தமிழக நிறுவனத்திடம் கொள்முதல் செய்வதன் ரகசியம் என்ன? அவை அனைத்திலும் ஹிந்தியில் எழுதப்பட்டிருக்கிறதே? ஒரு வேளை, திமுகவினர் வட மாநிலங்களில் வர்த்தகம் செய்கிறார்களோ? அல்லது அங்கே தான் பேரம் படிந்ததா? ஏன்? தமிழர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்?   ’’ என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

அவர் மேலும்,  ‘’சென்ற வருடம் பொங்கல் தொகுப்பு கொள்முதலில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டிய தி மு க, இந்த வருடம் அதே நிறுவனங்களிடம் கொள்முதல் செய்துள்ளதா? அப்படி செய்திருந்தால் எதிர்க்கட்சியாக இருந்த போது சொன்ன குற்றச்சாட்டு தவறு என்று ஒப்பு கொள்கிறதா? அது சரியென்றால் இப்போது ஊழல் நடந்துள்ளதா?  மேலும், பொங்கல் பையுடன் வழங்கப்படும் 21 பொருட்கள் என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டன? கடந்த வருடம் என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது? கடந்த வருடம் எந்தெந்த நிறுவனங்கள் இந்த பொருட்களை அளித்தன? இந்த வருடம் எந்த நிறுவனங்களிடம் வாங்கப்பட்டது போன்ற விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி இருக்கிறார்.