ஜெயலலிதா வீம்புக்காக செய்த தவறை ஓபிஎஸ் செய்தால்..கி.வீரமணி எச்சரிக்கை
தை மாதம் முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்பது மக்கள் மீது திணிக்கப்பட்ட சட்டம். எனவே, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து "சித்திரை 1 தமிழ் புத்தாண்டாக" தொடர, மாண்புமிகு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி இருக்கிறார்.
அவர் மேலும் இதுகுறித்து, தமிழ்நாட்டில் பல நூற்றாண்டு காலமாக சித்திரை மாத பிறப்பு தான் தமிழ் புத்தாண்டு தினமாக தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது காலங்காலமாக கடைபிடிக்கப்படுகின்ற மரபு. இந்த மரபினை முற்றிலும் சீர்குலைக்கும் விதமாக எந்தவித வலுவான ஆதாரமும் இல்லாமல் மக்களின் உணர்வுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தை மாதத்தின் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு வழி வகை செய்யும் சட்டம் முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் 2008-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
இந்த சட்டம் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு சட்டம். இந்த சட்டம் சாதாரண மனிதனின் உரிமையை பறிக்கும் சட்டம் என்று அப்போதே மக்கள் சொன்னார்கள்.
பண்டிகை என்பது இதுநாள் வரை கடைபிடித்து வந்த முறைப்படி மரபுப்படி கலாச்சாரத்தின் படி பழக்க வழக்கத்தின் படி கொண்டாடப்படுவது. இதற்கு எதற்கு சட்டம் இதில் ஏன் அரசு தலையிடுகிறது என்பது தான் மக்களின் வாதமாக இருந்தது. அதனால்தான் சட்டம் இயற்றப்படும் தமிழ்நாடு மக்கள் சித்திரை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வந்தார்கள்.
அந்த நேரத்தில்தான் ஜெயலலிதா 2011 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு வழி வகுத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுக்கள் தமிழ்நாட்டு மக்களால் அளிக்கப்பட்டன. மக்களின் கோரிக்கையை பரிசீலித்த முதல்வர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து யாருக்கும் பயன் அளிக்காத காலங்காலமாக போற்றிப் பாதுகாத்த தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்கிற சட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் 2022ஆம் ஆண்டு பொங்கல் பரிசு பையில் முகப்பில் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதை சொல்லி கண்டித்திருக்கிறார்.
இதற்கு திராவிடர் கழகர் தலைவர் கி.வீரமணி, திராவிடக் கொள்கைக்கும் அண்ணாவிற்கும் சம்மந்தமில்லாமல் எப்படி பெயர் வைத்து இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு அடையாளம். கொள்கைகளை மறந்துவிட்டு ஏற்கனவே செய்த தவறை மீண்டும் அவர்கள் செய்தது கண்டிக்கத்தக்கது என்கிறார்.
தமிழ்நாட்டில் தமிழ் திராவிட ஆட்சியில் தை 1ஆம் தேதி தான் தமிழ் புத்தாண்டு கொண்டாட வேண்டும். இதனை 1932ஆம் ஆண்டு தமிழக அறிஞர்கள் ஒன்று கூடி முடிவு செய்துள்ளனர். இதனைத்தான் கலைஞர் கொண்டு வந்தார் அதனை ஜெயலலிதா வீம்புக்காக மாற்றி தவறு செய்தார். இதே தவறை தற்போது இல்ல அதிமுகவினரும் செய்தால் அக்கட்சிக்கு தற்போது இருக்கும் நிலையை கூட அவர்களால் காப்பாற்றிக்கொள்ள முடியாது.