லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கிறேன் - முதல்வர் சூசகம்
கொஞ்சம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கிறேன் என்று சூசகமாகச் சொன்னார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்தவர் சஞ்சீவ் பானர்ஜி. இவர் மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார் இதனால் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகவும் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் நியமித்து உத்தரவிட்டிருந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று முனீஸ்வரர் நாத் பண்டாரியின் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வரர் நாத் பண்டாரி பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு நிகழ்வில், முதல்வர் மு.க .ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு , சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர்.
காலை 9.30 மணி அளவில் நடந்த இந்த விழாவில் பங்கேற்றுவிட்டு கோவையில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க முதல்வர் விமானத்தில் புறப்பட்டார். கோவையில் முதல்வருக்கு சாலையின் இருபக்கமும் ஏராளமான மக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். இதனால் முதல்வர் விழா அரங்கிற்கு செல்ல தாமதம் ஆனது.
இதை விழாவில் பேசும்போது முதல்வர் குறிப்பிட்டார். கோவை விமான நிலையத்திற்கு நான் சரியாக 11. 30 மணி அளவில் வந்தேன். நான் 11. 30 மணி அளவுக்கு வந்துவிட்டாலும் அங்கிருந்து விழா நடைபெறும் இந்த இடத்திற்கு வருவதற்கு ஏறக்குறைய மூன்று மணி நேரம் ஆகியிருக்கிறது . அதற்கு காரணம் வழியெல்லாம் சாலையின் இருபக்கமும் பொதுமக்கள், தாய்மார்கள், பெரியவர்கள், தொழிலாள தோழர்கள் மிகுந்த ஆர்வத்தோடு வரவேற்றனர். அதை எல்லாம் முடித்துவிட்டு குறித்த நேரத்தில் இந்த நிகழ்ச்சிக்கு வர முடியாமல் போய்விட்டது. கொஞ்சம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கிறேன் என்று சூசகமாகச் சொன்னார்..
இந்த நிகழ்ச்சிக்கு நான் வரவேண்டும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி என்னிடம் தேதி கேட்டார். நானும் ஒப்புக் கொண்டேன். அவர் நிகழ்ச்சியைத் தான் நடத்தப் போகிறேன் என்று என்னிடத்தில் சொன்னார். ஆனால் இன்றைக்கு நடப்பது நிகழ்ச்சி அல்ல ஒரு மாநாடு நடத்திக் கொண்டிருக்க கூடிய நிலையில் இது அமைந்திருக்கிறது. அதற்காக நான் அவரை பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன். அவருக்கு நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன்.
அவர் சாதாரண நிகழ்ச்சி என்று சொன்னாலே அது மாநாடு தான். ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட இருக்கிறது . கோடிக்கணக்கானவர்கள் பயன்பெறக்கூடிய வகையில் திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுகிறது என்று சொன்னாலும் ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்பது எனக்கு மகிழ்ச்சி அதிகம்.
மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் இதை ஏற்பாடு செய்து வெற்றி கண்டிருக்க கூடிய, வெறும் வெற்றியல்ல முழு வெற்றி கண்டு கொண்டிருக்கும் செந்தில் பாலாஜி அவர்களை அதேபோல் அவருக்கு துணை நின்று கொண்டிருக்க கூடிய மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்களை நான் மனதார பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் என்று நெகிழ்ந்தார்.
கோவையில் மக்களின் வரவேற்புதான் அப்படி என்றால், முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டுநாள் பயணமாகக் கோவை , திருப்பூர் வருகையினை முன்னிட்டு #KovaiWelcomesStalin என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
வழிநெடுக வாழ்த்திய நல்லுள்ளங்களின் அன்பு மழையில் நனைந்தவாறே கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
— M.K.Stalin (@mkstalin) November 22, 2021
ரூ.587.91 கோடி மதிப்பீட்டிலான 70 திட்டப்பணிகளைப் பாசத்திற்குரிய கோவை பகுதிக்கு அர்ப்பணித்து, ரூ.89.73 கோடி மதிப்பிலான 128 திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து மகிழ்ந்தேன். pic.twitter.com/7I3od5yShM