இதை ஐயாவிடம் எப்படி சொல்ல முடியும்? தவிப்பில் ஏ.கே.மூர்த்தி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் கட்சியினர் வேட்பாளர்கள் தேர்வில் ஒருபுறமும் , கூட்டணி பேச்சுவார்த்தையில் மறுபுறமும் தீவிரமாக உள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் பாமக நிர்வாகிகளுடன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி ஆலோசனை நடத்தியிருக்கிறார். 2011ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகர மேயர் பதவிக்கு பாமக வேட்பாளராக போட்டியிட்ட மூர்த்தி அந்த தேர்தலில் 47 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தார். அதன் பின்னர் நாடாளுமன்ற தேர்தல், கடந்த சட்டமன்றத் தேர்தல் வரைக்கும் சென்னையில் பாமக போட்டியிட்டு தங்களது ஆதரவு களத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டது பாமக .
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் சென்னை மாநகராட்சி நிலவரத்தைப் பற்றி அறிய கட்சி நிர்வாகிகளுடன் பேசியிருக்கிறார் ஏ.கே.மூர்த்தி. அப்போது கட்சியின் நிர்வாகிகள் சென்னையின் பல வார்டுகளில் பாமக சார்பில் வேட்பாளர்களை கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மூர்த்தி, உடனடியாக வேட்பாளர் பட்டியலைத் தயார் செய்யுங்கள் வேட்பாளர்களே இல்லை என்று அய்யாவிடம் எப்படி சொல்ல முடியும்? என்று பாமக சார்பில் போட்டியிட வேட்பாளர்களை உடனடியாக தேர்வு செய்ய வேண்டும் அறிவுறுத்தி இருக்கிறார்.