மார்ச் 10ம் தேதி தெரியும்...பிரியங்காவை எச்சரிக்கும் குல்தீப் செங்காரின் மகள்
மார்ச் 10ஆம் தேதி அன்று தெரியும் என பிரியங்கா காந்தியை எச்சரித்திருக்கிறார் குல்தீப் செங்காரின் மகள் ஐஸ்வர்யா.
கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் உன்னாவ் பகுதியில் 17 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த வழக்கில் பாஜக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் .
உன்னாவ் பாலியல் வழக்கில் குல்தீப் செங்கார் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது அடுத்து அவர் பாஜகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் . அவரின் மகள் ஐஸ்வர்யா உன்னாவ் தொகுதியில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தொகுதியில் களம் இறங்குகிறார்.
உத்தரபிரதேசத்தில் வரும் 10ஆம் தேதியன்று தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பிரியங்கா காந்தி உத்தர பிரதேச தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருக்கிறார். அதில் உன்னாவ் தொகுதியில் உன்னாவ் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் ஆஷா சிங் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு வழங்கி இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். இதற்கான வேட்பாளர் பட்டியலை பிரியங்கா காந்தி கடந்த 13ஆம் தேதியன்று வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்ததையடுத்து, செங்காரின் மகள் ஐஸ்வர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், பிரியங்கா காந்தி அவர்களே... நீங்கள் எடுத்த இந்த அரசியல் நடவடிக்கை நல்லதாக இருக்கலாம். நீங்கள் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர் ஆஷா சிங் மீது மாற்று சான்றிதழ் , மதிப்பெண் பட்டியலை போலியாக தயாரித்தற்கான வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களின் குடும்பத்தினர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவர்களை உன்னாவ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் . சமூகம் உங்களை மன்னிக்காது மார்ச் 10ஆம் தேதி இந்த முடிவை நீங்கள் பார்ப்பீர்கள். உன்னாவ் மக்களின் ஆசீர்வாதம் எனக்குத்தான் இருக்கிறது’’ என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த வீடியோ உன்னாவ் தேர்தலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.