அனைத்து ஊடகங்களும் திமுக ஊடகமாக மாறிவிட்டதா? துக்ளக் மீது அனல் அடிக்கும் முரசொலி

 
ச்ச் ச்ச்

அனைத்து ஊடகங்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊடகமாக மாறிவிட்டது என்றும்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சனமே செய்வதில்லை. போற்றிப் பாடுகிறது என்றும் துக்ளக் இதழ்  சொல்லி இருப்பதற்கு பதிலடி கொடுத்திருக்கிறது முரசொலி நாளிதழ்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், தமிழ்நாட்டு ஊடகங்கள் இன்னமும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் திட்டங்கள் குறித்தோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் துடிப்பும், சிறப்பும் இணைந்த செயல்பாடுகள் குறித்தோ முழுமையாகச் சொல்லத் தவறியே வருகின்றன என்றும், அது அவர்களது விருப்பம். அதனை அவர்களது மனச்சாட்சி அறியும். தமிழ்நாட்டு ஊடகங்கள் செய்யத் தவறியதை அண்டை மாநில ஊடகங்கள் மிகச் சரியாகச் செய்கின்றன என்பதுதான் முழுமையான, யாராலும் மறுக்கமுடியாத உண்மை என்கிறது முரசொலி தலையங்கம்.

ச்ட்

கேரளாவில் தி.மு.க ஆட்சியில் இல்லை. கேரளாவைச் சேர்ந்த பல்வேறு ஊடகங்கள் தமிழ்நாட்டு முதல்வரைப் புகழ்ந்தும், பாராட்டியும் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளை வழங்கி வருவது துக்ளக் துர்வாசருக்குத் தெரியுமா?  என்று கேட்டுவிட்டு,  பேரே‘துர்’வாசர். அவர் துர்வாசனை தவிர வேறு ஏதும் அறிய மாட்டாரா? என்று கேட்கிறது முரசொலி.

ஆந்திராவிலோ, தெலுங்கானாவிலோ தி.மு.க ஆட்சியில் இல்லை. தெலுங்கு மொழி சார்ந்த ஊடகங்கள் தமிழ்நாட்டு முதல்வரைப் புகழ்ந்தும், பாராட்டியும் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளை வழங்கி வருவது துக்ளக் துர்வாசருக்குத் தெரியுமா?  என்று கேட்கும் முரசொலி,  ஆந்திராவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர், தமிழக முதலமைச்சரை தனது பேட்டியில் ‘தலைவர்’ என்றே விளித்தார். ஏதோ என் உள்ளுணர்வு மு.க.ஸ்டாலின் அவர்களை அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது என்று அந்தப் பத்திரிக்கையாளர் பேட்டி அளித்தார் என்பதை குறிப்பிட்டிருக்கும் முரசொலி, 

கன்னடத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர், தமிழ்நாட்டில் ஒரு அறிவிப்பு செய்யப்பட்டால், அதை உடனே கர்நாடகாவிலும் செய்யுங்கள் என்று எல்லோரும் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். அந்தளவுக்கு முன்னுதாரணமான ஆட்சியை மு.க.ஸ்டாலின் கொடுத்து வருகிறார் என்று சொல்லி இருக்கிறார். இதை எல்லாம் பார்த்து துக்ளக் என்ன சொல்லப்போகிறது? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

ஐம்பது ஆண்டுகளாக தி.மு.க. மீது கட்டி வைத்த பொய்ப் பிம்பத்தை,பேசாமலேயே தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தகர்த்துவிட்டார், தகர்த்து வருகிறார் என்ற எரிச்சலில் இவர்கள் எழுதுகிறார்கள். அவர்கள் எழுதட்டும் என்று சொல்லும் முரசொலி,  துக்ளக் பத்திரிக்கை ஆரம்பித்ததே, திராவிட இயக்கத்தை வீழ்த்துவதற்காக!  என்கிறது.  துக்ளக் பத்திரிக்கையின் ஒரே குறிக்கோள், தி.மு.க.வை விமர்சிப்பது, கேவலப்படுத்துவது ஆகிய இரண்டுக்காக! மட்டுமே என்கிறது.

வ்

தி.மு.க.வை, கொச்சைப்படுத்துவது மட்டுமே தனது பிறவி தர்மமாகக் கொண்ட ஒரு பத்திரிக்கை, ஊடக தர்மம் குறித்து எழுதலாமா? என்று கேட்கும் முரசொலி,  சோவை நான்தான் வீரமணியிடம் அனுப்பினேன். நான் தயாரித்துத் தந்த கேள்விகளைத்தான் சோ, வீரமணியிடம் கேட்டார்  என்று பத்திரிக்கையாளர்கள் சின்னக்குத்தூசியிடமும் ஞாநியிடமும் சொன்னவர், மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர். அன்று ஊடக தர்மம் நாறியது என்றும், 

அ.தி.மு.க.வின் பொருளாளராகவும், அமைச்சராகவும் முன்பு இருந்தார் பி.சௌந்தர பாண்டியன்.  அவர், எம்.ஜி.ஆருக்காக என்னை வேவு பார்க்கிறார் சோ என்று பேட்டி கொடுத்தார் .  அன்று ஊடக தர்மம் நாறியது என்றும், அமைச்சர் காளிமுத்துவிடம் பேட்டி எடுத்துவிட்டு அதனை பத்திரிக்கையில் பிரசுரம் செய்வதற்கு முன்னதாக எம்.ஜி.ஆருக்குப் போட்டுக்காட்டிவிட்டார் என்று அன்று செய்தி பரவிய அன்று ஊடக தர்மம் நாறியது என்றும்  அடுக்கும் முரசொலி,  சசிகலா கஸ்டடியில் இருந்த ஜெயலலிதாவை முதலில் எதிர்த்தும், அதன்பிறகு சசிகலாவை அவரிடம் இருந்து பிரித்தும் ஞானகுருவாகவே கடைசிவரை இருந்து செயல்பட்டவர் நடத்திய பத்திரிக்கை, ஊடக தர்மம் குறித்து எழுதுகிறது என்று ஆத்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.

திராவிட இயக்கத்தின் மீதும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் பாய்ந்து பிராண்டுகிறார்கள். தர்மனின் தோல் போர்த்திய சகுனிகள் இன்று தமிழ்ச் சமுதாயத்துக்கு பாடம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் அனல் அடித்திருக்கிறது .