பயப்படாதீங்க ஸ்டாலின்..பாஜகவை நாங்க பாத்துக்கிறோம் - வெடிக்கும் சீமான்
அர்ஜுன் படத்தில் வருவதை போல் என்னை ஒரே ஒரு நாள் முதல்வர் ஆக்குங்கள். எல்லாத்தையும் செய்து விட்டு விலகிக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளையும், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய மறுக்கும் தமிழக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இதில் சீமான் பேசும்போது, முதலமைச்சர் ஸ்டாலின் விடுதலை செய்யணும். இல்லை என்றால் தொடர்ந்து நாங்கள் போராட்டம் நடத்துவோம். எனக்கு வேறு வேலையும் இல்லை. டெல்லி போராட்டம் மாதிரி திருச்சியில் உட்கார்ந்து விடுவேன். சிறைக் கதவை திறந்து அவர்களை வீடு அல்லது எங்களை உள்ளே போடு என்று சொல்வோம். எங்களால் போராடத்தான்ப் முடியும் விடுதலை செய்யும் அதிகாரம் இல்லை என்று சொன்ன சீமான்,
ஸ்டாலின் நீங்க பயப்படாதீர்கள். எதற்கு பயப்படுகிறீர்கள்.. பாஜகவினர் கத்துவாங்க அவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். முதலமைச்சர் ஸ்டாலின் நீங்கள் விடுதலை செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்று அழுத்தமாகச் சொன்னார்.
தொடர்ந்து பேசிய சீமான், நான் ஓட்டுக்கானவன் கிடையாது. உரிமைக்கானவன். எனக்கு எந்த பிரதிபலனும் இல்லை என்று சொன்னவர், அர்ஜுன் படத்தில் வருவதைப் போல என்னை ஒரே ஒரு நாள் முதல்வராக ஆக்குங்கள். எல்லாத்தையும் செய்து விட்டு விலகிக் கொள்கிறேன். முதல்வர் துணிந்து இதில் முடிவு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.