இபிஎஸ், திருமாவை அடுத்து அன்புமணியும்...

 
as

தருமபுரி மாவட்டம் மொரப்பூரில்  நாம் தமிழர் நடத்திய பொதுக்கூட்டத்தில் திமுகவினர் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. சகிப்புத் தன்மையும், கருத்துரிமையை மதிப்பதும் தான் ஜனநாயக அரசியலின் அடிப்படை. அதை மீறியவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்!
விமர்சனங்களுக்கு வன்முறைகளால் பதிலடி தரத் தொடங்கினால் தமிழகம் அரசியல் களமாக இருக்காது.  வன்முறைக்களமாக மாறிவிடும். அந்த நிலை ஏற்பட்டு விடக் கூடாது. அதைக் கருத்தில் கொண்டு இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் அனைவரும் தடுக்க வேண்டும் என்று  நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் தகராறில் ஈடுபட்ட திமுகவினருக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.

e

இருபது ஆண்டுகளைக் கடந்தும் இஸ்லாமியர் என்பதனாலேயே விடுதலை செய்யமறுக்கும்  அரசின் செயலைக் கண்டித்தும், 30 ஆண்டுகளைக் கடந்தும் சிறைக்கொட்டடியில் வாடும் ஏழு பேர் விடுதலையைக் கோரியும்  தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  ஆர்ப்பாட்ட மேடையில் மாநில பேச்சாளர் ஹிம்லர் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று மேடையில் ஏறிய திமுக மொரப்பூர் ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் உள்ளிட்டவர்கள்,   மேடையிலிருந்த மைக்கை பிடுங்கி தூர வீசி நாற்காலியை தூக்கி நாம் தமிழர் கட்சியினர் மீது அடித்திருக்கிறார்கள்.

பின்னர் அங்கிருந்து மைக்செட் ஸ்பீக்கர் உள்ளிட்டவற்றை அடித்து துவம்சம் செய்ய முற்பட்ட போது உங்களுக்குள் உள்ள   சண்டையில் என் பொருளை ஏன் சேதம் செய்கிறீர்கள் என்று மைக் செட் காரர் ஆத்திரத்துடன் அவர்களை தடுத்து சத்தம் போட்டிருக்கிறார்.  இதன் பின்னர் நாம் தமிழர் கட்சியினர் திமுகவினருடன் கடுமையான வாக்குவாதம் செய்ய , உடனே போலீசார் மேடையேறி திமுகவினரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.  நடந்த சம்பவம் குறித்து  மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

tt

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் திமுகவினரின் இப்போக்கு கோழைத்தனத்தின் உச்சம். வடமாநிலங்களில் பாஜக செய்யும் அதேவகையிலான வன்முறையையும், சனநாயகத்திற்கு எதிரானக் கொடுங்கோல் போக்கையும் ஏவிவிடும் திமுகவினரின் செயல் இழிவானது. அதிகாரத் திமிரிலும், ஆட்சி தந்த மமதையாலும் காவல்துறையைக் கைவசம் வைத்துக்கொண்டு அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றும் திமுகவினரின் செயல் வெட்கக்கேடானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கண்டனம் தெரிவித்திருந்தார் சீமான்.

 கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியபோது,  நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் தகராறு செய்த திமுகவினரின் குறித்து கேள்வி எழுப்பிய போது,     கருத்துக்கு கருத்து தான் எடுத்து வைக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடக்கூடாது.   நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் தகராறில் ஈடுபட்ட திமுகவினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

vv

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  ஜனநாயக முறைப்படி நாம் தமிழர் கட்சியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் , கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக-வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  எதிர்க்கட்சியினர் மீது ஆளும் கட்சியினர் நடத்தும் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.