தேர்தல் ஆணையருக்கே தெரியாமல் அதிமுகவில் தேர்தலா?
சென்னை எம்ஜிஆர் மாளிகையில் நேற்று நடந்த அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் இனி அதிமுக இரட்டை தலைமையின் கீழ்தான் இயங்கும் என்றும், அதிமுகவில் பொதுச்செயலாளர் என்கிற பதவி கிடையாது ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு பதவிகள் தான் உறுதியானது என்று சட்ட திருத்த விதிகள் செய்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் இன்றைக்கு ஒருங்கிணைப்பாளர் -இணை ஒருங்கிணைப்பாளர்களுக் காண தேர்தல் வரும் 7ஆம் தேதியன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கழக அமைப்புகளின் பொதுத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்திட வேண்டும் என்ற விதிமுறைக் கேற்ப கழக ஒருங்கிணைப்பாளர் - கழக இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைபெற உள்ளது என்றும் அதிமுக தலைமைக்கழகம் தெரிவித்திருக்கிறது.
நாளை மற்றும் நாளை மறுநாள் வேட்புமனுத்தாக்கல் என்றும், ஏழாம் தேதியன்று தேர்தல் என்றும், எட்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவு அறிவிப்பு என்றும் அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் சேலத்தில் முன்னாள் அமைச்சர் தம்பிதுரையின் மகள் நர்மதா திருமண விழாவில் பங்கேற்பதற்காக வந்திருந்த பொன்னையனை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அவரிடம், ஏழாம் தேதி நடைபெறும் தேர்தல் குறித்து கேட்க, அப்படி ஒரு தேர்தல் ஏழாம் தேதி நடப்பதாக யார் சொன்னது உங்களுக்கு என்று கேட்டு அதிர வைத்தார்.
அதிமுக தலைமையை தான் அறிவித்து இருக்கிறதே என்று செய்தியாளர்கள் திரும்ப கேட்க, இல்லை என்று சொல்லியிருக்கிறார்.
அந்தத் தேர்தலில், தேர்தல் ஆணையாளர்கள் என்று பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் இருவரைத்தான் தலைமைக்கழகம் அறிவித்திருக்கிறது. அப்படி இருக்கும்போது பொன்னையன் இல்லை என்று சொல்லுவதால், தேர்தல் ஆணையருக்கே தெரிவிக்காமல் இந்த அறிவிப்பை அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுவிட்டார்கள் என்றுதான் சலசலப்பு எழுந்திருக்கிறது.


