எட்டு ஆண்டுகால சாதி சர்ச்சை - அதிமுகவுக்கு வந்த தலைவலி நீங்கியது
சாதி சர்ச்சையால் அதிமுகவுக்கு வந்த தலைவலி நீங்க இருக்கிறது. அதிமுகவை தேர்தல் ஆணையம் தடை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிய வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. இது பொது நல வழக்கு இல்லை, தனிநபர் பாதிப்பு குறித்த வழக்கு என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
சென்னை அசோக் நகரில் வசித்து வருபவர் கயல்விழி. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கு தொடுத்திருந்தார் இவர். ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளராக இருக்கும் முனியசாமியும், அவரது மனைவி கீர்த்திகாவும் மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் உறவினர் தான் நான்.
கல்லூரியில் பிஏ படித்து வந்தேன். அந்த சமயத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த செல்வகுமாரை காதலித்தேன். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து விட்டோம். இதை தெரிந்து கொண்ட உறவினர்கள் குறிப்பாக முனியசாமி தலைமையிலான உறவினர்கள் ஆணவ கொலை செய்வதாக முயற்சி செய்தார்கள். இதனால் கடந்த 2003ஆம் ஆண்டு நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டோம்.
அதிமுகவைச் சேர்ந்த முனியசாமி அவருடைய கட்சி பலம் அதிகார பலத்தை கொண்டு எங்களை தொடர்ந்து மிரட்டி வருகிறார். இந்திய தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதி சாதி மத ரீதியான பாகுபாடு பார்க்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. ஆனால் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் எட்டு ஆண்டுகளாக என் மீது பாகுபாடு கொண்டு என்னை பல வகையிலும் தொந்தரவு செய்து வருகிறார் முனியசாமி.
இதனால் முனியசாமி தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். அவர் சார்ந்துள்ள அதிமுக கட்சியினையும் தேர்தல் ஆணையம் தடை செய்ய உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், இது பொதுநல வழக்கை கிடையாது. தனிநபர் பாதிப்பு குறித்த வழக்கு தான் . மேலும் மனுதாரர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட வேண்டும். தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக கூறியிருக்கிறார்கள். ஆனாலும் அடுத்த வாரத்துக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.