மாரிதாஸ் மீது பாய்கிறதா குண்டர் சட்டம் - ஆளுநரை சந்திக்கும் அண்ணாமலை
சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இயங்கி வந்த கிஷோர் கே. ஸ்வாமி, கல்யாணராமன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதுபோல் மாரிதாசையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய முயற்சிகள் நடந்து வருவதாகவும் அதை முறியடிக்க ஆளுநரை சந்திக்கிறார் அண்ணாமலை என்றும் தகவல்.
ட்விட்டர் . யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அரசியல் கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தவர் மாரிதாஸ் . அவர் முதுகுளத்தூர் மாணவர் மணிகண்டன் பற்றி போட்ட பதிவினால் மற்றும் திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா? தேசத்திற்கு எந்த பெரிய துரோகத்தையும் செய்யக்கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால் அங்கே எந்தப் பெரிய சதி வேலை நடக்கவும் சாத்தியமுண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும் என்ற பதிவினாலும் மதுரை போலீசார் கடந்த 9ஆம் தேதியன்று அவரை கைது செய்தனர். 23ஆம் தேதி வரை அவர் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு இருப்பதால், தேனி மாவட்டம் உத்தமபாளையம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
மாரிதாசை கைது செய்ய முற்பட்ட போது பாஜகவினர் திரண்டு வந்து போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் போலீசாருடன் வாக்குவாதம் செய்து, கைது செய்யும்போது தடுத்த 50 பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மாரிதாஸ் கைதுக்கு எதிராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கருத்து சுதந்திரத்திற்கு எதிராக காவல்துறையை பயன்படுத்தி வருகிறது திமுக அரசு என்று திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மாரிதாசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முயற்சிகள் நடந்து வருவதாக பாஜக தரப்பு கருதுகிறது. ஏற்கனவே ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் மாரிதாஸ் மீது கடந்த ஆண்டு நியூஸ் -18 சேனலின் ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் நேற்று மீண்டும் மாரிதாசை கைது செய்திருப்பதாக சிறையில் இருக்கும் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுமாதிரி மாரிதாஸ் மீது இருக்கும் வழக்குகளை எல்லாம் ஒன்று சேர்த்து அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீஸ் தயாராகிக் கொண்டிருக்கிறது என்று பாஜகவிற்கு தகவல் தெரிய வந்திருக்கிறது. ஏற்கனவே கிஷோர் கே. ஸ்வாமி, கல்யாணராமன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டது போல் மாரிதாசையும் அடைத்து விடக்கூடாது என்பதால் அண்ணாமலை தீவிரமாக களமிறங்கியிருக்கிறார். இதற்காக அவர் அறிவுறுத்தலின் பேரில் கமலாலயத்தில் வாயில் கருப்பு துணி கட்டி கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர் பாஜகவினர். தமிழகம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கின்றார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.