பஞ்சாப் தேர்தலை முன் வைத்து திரும்ப பெற்றாரா மோடி?
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானது என்று நாடெங்கிலும் விவசாயிகள் தொடர் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்திவந்தனர் . டெல்லியில் விவசாயிகள் தொடர் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை அடுத்து 3 வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டுவர பாஜக முயற்சி செய்தது. ஆனால் தங்களுக்கு திருத்தம் தேவை இல்லை 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து போராடி வந்த போராடி வந்தனர்.
இதுதொடர்பாக டெல்லியில் பெரும் வன்முறை வெடித்தது. அது உலகெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. பல உயிரிழப்புகளும் இந்த போராட்டங்களில் ஏற்பட்டு நாடெங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், இதுதொடர்பான போராட்டங்களால் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி விவசாயிகள் மீது காரை ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.
இந்த நிலையில் மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் வீடு திரும்பவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் பிரதமரின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், ‘’ தாமதமான முடிவு என்றாலும் ஓராண்டாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வன்னியரசு, ‘’ஓராண்டுக்கும் மேலான சமரசமில்லா போராட்டம், 70க்கும் மேற்பட்ட விவசாயிகளின் வீரச்சாவுக்கு பிறகு இந்திய ஒன்றிய தலைமை அமைச்சர் மோடி 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறப்போவதாக அறிவித்துள்ளார். விவசாயிகளின் வீரமிக்க போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி இது. வீரச்சாவுகளே விதிகளை திருத்தும் என்கிறார்.
அவர் மேலும், பஞ்சாப் தேர்தலை முன் வைத்து வேளாண் சட்டங்கள் திரும்ப பெற்றாலும், இது விவசாயிகளின் சமரசமற்ற போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியே! இதே போல, UAPA சட்டம் மற்றும் குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பபெற சமரசமற்ற போராட்டங்களை முன்னெடுப்போம். வீரச்சாவுகளே விதிகளை திருத்தும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.