ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக மேலும் 3 பேர் சொன்ன புகார்

 
rb

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது மேலும்  மூன்று பண மோசடி புகார்கள் கூறப்பட்டுள்ளன.  அடுத்தடுத்து புகார்கள் குவிவதால் ராஜேந்திரபாலாஜியின் முன் ஜாமீன் விவகாரத்தில் சிக்கல் நீடிக்கிறது.

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி ,பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட 4 பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இரு வேறு வழக்குகளில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது .  ஆவினில் வேலை வாங்கித் தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

 இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.  அந்த மனு தள்ளுபடி ஆனது.  இதை அடுத்து ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருக்கிறார் என்றும் அவரை பிடிப்பதற்காக குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தேடிவருகிறார்கள் என்று தகவல் வெளியானது.  அதன்பின்னர்  மேலும் 3 தனிப்படை அமைக்கப்பட்டு மொத்தம் 6 தனிப்படை தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

br

 முன் ஜாமின் கிடைக்க வில்லை என்றதுமே அவர் பெங்களூருக்கு சென்று தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகிறது. இதற்காக அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ராஜேந்திரபாலாஜி எங்கே இருக்கிறார் என்று கேட்டு தொந்தரவு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.  ராஜேந்திர பாலாஜி எங்கே இருக்கிறார் என்பதை விசாரிப்பதற்காக அவரின் சகோதரி மகன்களான ரமணா வசந்தகுமார் ஆகியோரையும் அவரது டிரைவர் ராஜ்குமார் திருத்தங்கள் போலீசார் அழைத்துச் சென்று விசாரித்து வந்தார்கள்.

இதனால், ராஜேந்திர பாலாஜியின் சகோதரி லட்சுமி  உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.  அதில், ராஜேந்திரபாலாஜியை தேடும் முயற்சியில் குடும்பத்தினரை தொந்தரவு செய்கிறார்கள் என்று கூறியிருந்தார். இதை விசாரித்த நீதிபதி,    முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை  எப்படி வேண்டுமானாலும் தேடுங்கள்; விசாரணை செய்யுங்கள்.  அவரது குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் கூறி இருந்தார்.

 தலைமறைவாக இருக்கும் ராஜேந்திர பாலாஜி,  உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு  மனு தாக்கல் செய்தார்.  அவர் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில்,  சிறப்பு அமர்வு அமைத்து தனது முன் ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் காவல் துறையினர் தனது குடும்பத்தினரை துன்புறுத்துவதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க விமான நிலையங்களுக்கு  லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி இருக்கிறது காவல்துறை . ராஜேந்திரபாலாஜியின் 6 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டன.

 தலைமறைவாக இருக்கும் ராஜேந்திரபாலாஜி எப்படியும் முன்ஜாமீன் வாங்கி விட வேண்டும் என்று தீவிரமாக இருப்பதால் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு விவகாரத்தில் தங்கள் தரப்பை கேட்காமல் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறது.

rr

 இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி மீது அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருகின்றன.  சத்துணவு வேலை வாங்கித் தருவதாக சொல்லி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்  ஒரு புகார் வந்திருக்கிறது.  சாத்தூரைச் சேர்ந்த ஒருவரும் புகார் கொடுத்திருக்கிறார்.  இந்த நிலையில் மேலும் மேலும் 3 புகார்கள் ராஜேந்திரபாலாஜி மீது கூறப்பட்டிருக்கிறது.

 சிவகாசி சித்துராஜபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த தூய மணியின் மனைவி குணா தூயமணி வேலை வாங்கி தர வேண்டி 17 லட்சம் கொடுத்து ஏமாந்து விட்டேன் என்பது புகார் கொடுத்திருக்கிறார்.   மதுரை வில்லாபுரம் காமராஜர் நகர் மூணாவது தெருவைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவர் மதுரை மாநகராட்சியில் அலுவலக உதவியாளர் வேலை வாங்கித்தருவதாக ஏழு லட்சம் ரூபாய் பணம் கொடுத்து ஏமாந்து விட்டதாக புகார் தெரிவித்திருக்கிறார்.   கடலூர் மாவட்டம் நெய்வேலி ஜோசப் என்பவர் இந்து சமய அறநிலையத் துறை அலுவலக உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக சொன்னதால் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொடுத்து விட்டு ஏமாந்து நிற்பதாக புகார் கூறியிருக்கிறார்.

 போலீசார் இம்மனுக்களில் உள்ள முகாந்திரம் குறித்து ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  முகாந்திரம் இருந்தால் விரைவில் வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது.