மோடி வரும்போது மட்டும் பலூன் விட்டு விளையாடலாமா? எச்.ராஜா கொந்தளிப்பு
திமுக அரசை விமர்சித்து வந்த பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவை மீது அரசு மீது கடுமையான கண்டனங்களை தெரிவித்து வந்தார். திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் இல்லை என்று அண்ணாமலையும் பாஜக நிர்வாகிகளும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். கிஷோர் கே. சாமி, கல்யாணராமன் போன்ற பாஜகவினர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து பாஜக ஆதரவாளர் மாரிதாசை குண்டர் சட்டத்தில் அடைக்க முயற்சிகள் நடந்து வருவதை அறிந்து , தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து முறையிட்டார் அண்ணாமலை.
இந்த விவகாரத்தில், பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. திமுக ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்று கொந்தளித்து வந்தார் அண்ணாமலை.
இது குறித்த கேள்விக்கு அமைச்சர் காந்தி அவன் எல்லாம் ஒரு தலைவன் அவனைப்பற்றி கேட்கலாமா என்று விமர்சித்தார்.
’’அவன் ஒரு தலைவரு, அவனை பத்தி பேசுரயே நீ?அவன் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசினுக்கிறான்.ஒரு படிச்சவன் என்ன பேசணுமோ அதை பேசணும், தகுதி இல்லாத வார்த்தை பேசக்கூடாது. பவர்ங்கிறது பெர்மனண்ட் இருக்காது.அவன் என்ன தைரியத்துல பேசுறான்? மத்தியில அரசு இருக்குதுனு பேசுறான்’’என்று அமைச்சர் காந்தி பேசியது குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் இந்த பேச்சை ஏற்று கொள்கிறாரா? இது தான் அண்ணாதுரை அவர்களின் 'கடமை,கண்ணியம், கட்டுப்பாடா'? தமிழகத்தின் அமைச்சர் ஒருவர் அநாகரீகமாக பேசுவதை, முதலமைச்சாராக கண்டித்திருக்க வேண்டாமா ? என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜகவினர் வலியுறுத்தி வந்தனர்.
பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜாவும் இந்த விவகாரம் குறித்து வெடித்தார். வேலூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழகத்தில் மிகவும் மோசமான ஒரு நிர்வாகம் நடக்கிறது. மிகவும் மோசமான அரசாங்கமாக திமுக அரசு இருக்கிறது. நெருக்கடி நிலையைவிட மோசமான காட்டாட்சி, சர்வாதிகார ஆட்சி சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது என்றார் ஆவேசமாக.
அவர் மேலும், பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் பலூன் விட்டு விளையாடினார்கள். நீங்கள் பிரதமரை விமர்சிக்கலாம். ஆனால் முதல்வரை யாரும் விமர்சிக்கக் கூடாதா? என்ற ஆவேச கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், மகாத்மா காந்தியின் பெயரை கெடுக்கவே காந்தி என்ற அமைச்சர் இருக்கிறார். கட்டப்பஞ்சாயத்து, கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் எல்லாம் தமிழக அமைச்சராக இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் யாரும் கட்டப்பஞ்சாயத்து செய்து அரசியலுக்கு வரவில்லை. அண்ணாமலை ஐபிஎஸ் படித்துவிட்டுத்தான் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்று திமுகவை கடுமையாக தாக்கியவர், காந்தி போன்ற அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலின் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் மோசமான பின் விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்தார்.