’’ஒரே கட்சி பாஜகதான் என்பதை ஸ்டாலின் மறுக்க முடியுமா? ’’

 
ss

மருத்துவ மற்றும் மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) 27சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது என்கிறார் தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி . 

திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்த 2007ம் ஆண்டு முதற்கொண்டே இதே நிலை தான் தொடர்கிறது என்பதை மறைக்க முடியுமா அல்லது மறுக்க முடியுமா? உண்மை நிலையினை மக்களிடம் எடுத்து கூறாமல் , அரசியல் உள்நோக்கத்தோடு விடப்படும் அறிக்கைகளை உறுதியாக மறுக்கிறது பாஜக என்று சொல்லும் நாராயணன்,    04/01/2007 அன்று தி மு க, பாமக  அங்கம் வகித்த காங்கிரஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கல்வி நிறுவனங்களில்  இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என  சட்டம் கொண்டு வந்த போது, அது மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என குறிப்பிட்டு, அரசு கல்லூரிகள்  மற்றும் தனியார் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு  இட ஒதுக்கீடு அளித்து உத்தரவு பிறப்பிக்காதது ஏன்? மேலும், 2014 வரை எந்த வழக்கும், தடையும் இல்லாத நிலையில், 6 ஆண்டுகள் திமுக,  காங்கிரஸ்  கூட்டணி  ஆட்சியில் இருந்த போது, அகில இந்திய ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு குறித்து வாய்மூடி மௌனமாக இருந்தது ஏன்?  என்று கேள்விகளை எழுப்புகிறார்.

rs

இது குறித்து கவலையே கொள்ளாத தி மு க, 2015ல் தொடரப்பட்ட வழக்கில், தங்களை இணைத்து கொள்ளாது, கடந்த வருட மருத்துவ படிப்புக்கான அகில இந்திய கலந்தாய்வு கூட்டம் ஏப்ரல் மாதமே முடிந்து விட்ட நிலையில், திடீரென்று அதன் பிறகு கலந்தாய்வை  தடை கோரி வழக்கு தாக்கல் செய்தது உள்நோக்கம் கொண்ட அரசியல் காரணத்தினால் தான் என்பது கண்கூடு என்று  சொல்லும் நாராயணன், 

2015ல் தொடுக்கப்பட்ட சலோனி குமாரி வழக்கில், ஜனவரி 2016 லியே மத்திய பாஜக அரசு தன் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்து விட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டில் எஸ்.சி. எஸ்.டி பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், மற்ற பிரிவினருக்கு ஒதுக்கீடு அளிக்கும் உரிமை உச்ச நீதிமன்றத்திற்கே உள்ளதால், மேற்கண்ட வழக்கில் ' இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு உரிய இட ஒதுக்கீடு தர தயாராக உள்ளது மத்திய அரசு, இதற்கான உத்தரவை வழங்குங்கள்' என்றும் அந்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டது.
 
மேலும் கடந்த வருடம் இது குறித்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கிலும், பாஜக மத்திய அரசு இதே நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதன் அடிப்படையில், 'சட்ட அங்கீகாரம் இல்லாத நிலையில், இட ஒதுக்கீடு, அடிப்படை உரிமை இல்லை என்றாலும் கூட, அகில இந்திய ஒதுக்கீட்டில் மத்திய அரசு இட ஒதுக்கீடு வழங்க கொள்கை முடிவெடுத்துள்ளது என்ற ஒரே அடிப்படையில், எத்துனை விழுக்காடு இட ஒதுக்கீடு என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்க உத்தரவிட்டது .மேலும்,சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவுப்படி, மத்திய அரசு குழு அமைத்து, அதன் பரிந்துரையின் படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%  ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஆணையிட்டது. பாஜக அரசின் இந்த கொள்கை நிலைப்பாட்டின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட  பிரமாண  வாக்குமூலத்தினால் மட்டுமே, அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீடு சாத்தியமாகியது. ஆனால்,  மத்திய பாஜக அரசின் கொள்கை நிலைப்பாட்டினால் அல்லாது, தங்களின் முயற்சியால் தான் கிடைத்தது என்று  திமுகவால் நிரூபிக்க முடியுமா? என்று கேட்கிறார்.

n

1986 முதல் அமலில் உள்ள  அகில இந்திய ஒதுக்கீட்டில் கடந்த 34 வருடங்களாக இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்காக குரல் கொடுக்காத திமுக, அதை நிறைவேற்ற தயார் என்று பாஜக அரசு முடிவெடுத்ததையடுத்து வழங்கப்பட்ட தீர்ப்பை, தங்களின் அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள முனைவது அக்கட்சியின் அரசியல் உள்நோக்கத்தையே வெளிப்படுத்துகிறது. 

மேலும்,'மண்டல் குழு பரிந்துரைகள் நடைமுறைக்கு வர தமிழகம் ஆற்றிய பங்களிப்புக்கு ஈடானது இந்த வெற்றி' என்று குறிப்பிட்டுள்ளார் திரு.ஸ்டாலின் அவர்கள். மண்டல் குழு அமைக்கப்பட்டது தற்போதைய பாஜக அங்கம் வகித்த ஜனதா ஆட்சியில் தான் என்பதை ஸ்டாலின் அவர்கள் மறந்து விட்டு பேசுவது வியப்பளிக்கிறது. மேலும், 1979 முதல் 1989 வரை மண்டல் ஆணையம் அளித்த பரிந்துரைகளை நடைமுறைக்கு கொண்டு வர திமுக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதை வரலாறு கூறும். அதை கிடப்பில் போட்ட காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்ததால் வாய் மூடி மௌனம் காத்தது திமுக என்பதை மு. க.  ஸ்டாலினால் மறுக்க முடியுமா? 1989ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மண்டல் ஆணைய பரிந்துரைகளை நிறைவேற்றுவோம்' என வாக்குறுதி அளித்த ஒரே கட்சி பாஜக தான் என்பதை  ஸ்டாலின்  மறுக்க முடியுமா? என்று கேட்கும் நாராயணன்,

பாஜக கொள்கை முடிவெடுத்ததையடுத்து அகில் இந்திய ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், எங்கே அதன்  வெற்றி பாஜகவை சென்று சேர்ந்து விடுமோ என்ற அச்சத்தில் திமுக தன்  நாடகத்தை அரங்கேற்றி அதற்கு சொந்தம் கொண்டாட முயற்சிக்கிறது  என்பதே உண்மை. சமூக நீதிக்கும், சட்டத்திற்கும் பாஜக என்றும் தலைவணங்கும் என்பதோடு, அரசியல் கலப்பில்லாத, உள்நோக்கமில்லாத சமூக நீதிக்கு, பாஜக என்றும் துணை நிற்கும் என்கிறார்.