அடிக்கடி மன்னித்து கொண்டே இருக்க முடியாது- விந்தியா

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக - பாஜக இடையே நான்கு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டவில்லை. இதை அடுத்து டெல்லி தலைமையிடம் ஆலோசனை செய்து தனித்துப் போட்டியிடும் முடிவை அறிவித்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
நகர்ப்புற ஊராட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெறாமல் போனதற்கு காரணம் நயினார் நாகேந்திரன் தான் என்று பேசப்படுகிறது. அதிமுக எம்எல்ஏக்கள் ஆண்மை இல்லாதவர்கள், முதுகெலும்பு இல்லாதவர்கள் என்று நயினார் நாகேந்திரன் பேசிய பேச்சு கட்சி தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் கட்சித் தலைமை அமைதியாக இருந்தது .
அமைதியாக இருந்து கடைசியில் கூட்டணி பேச்சு வார்த்தையில் தங்கள் கோபத்தை காட்டி இருக்கிறார்கள். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 30 சதவீத இடங்களை எதிர்பார்த்த பாஜகவுக்கு 10 சதவீத இடங்கள் மட்டுமே கொடுக்க முடியும் என்று கறாராகச் சொல்லிவிட்டார்கள். வேறுவழியின்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம் மற்றபடி அதிமுக கூட்டணியில் பாஜக தொடருகிறது என்று அறிவித்திருக்கிறார் அண்ணாமலை.
இதுகுறித்து அதிமுக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் விந்தியா, ’’நயினார் நாகேந்திரன் பேசியது போல இனிமேல் யாராவது பேசினால் தக்க பதிலடி கொடுப்போம். அடிக்கடி மன்னித்து கொண்டே இருக்க முடியாது’’ என்று தெரிவித்து இருக்கிறார் .
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவை கழட்டி விட்டதால், சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதற்காகவே அதிமுகஇஎப்படி செய்திருக்கிறது என்ற விமர்சனத்திற்கு, சிறுபான்மையினர் வாக்கு வங்கி குறித்த பயம் இருந்திருந்தால் சட்டப்பேரவைத் தேர்தலிலேயே தனியாக சந்தித்து இருப்போமே என்று தெரிவித்திருக்கிறார் விந்தியா.