ரத்த பாச சென்டிமென்ட் - குழப்பத்தில் அதிமுக
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருநெல்வேலி மாநகராட்சியில் இருக்கும் ரத்த பாச செண்டிமெண்டால் 55 வார்டுகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அதிமுக குழப்பத்தில் இருக்கிறது.
ஒரே ரத்த , உறவுகள் அதிமுக- திமுகவில் உள்ளனர். அதிமுக ஆட்சியில் திமுகவில் உள்ள ரத்த உறவு போட்டியிடாமல் இருக்க, திமுக ஆட்சியின்போது அதிமுக உறவு போட்டியிடாமல் விட்டுக் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது நெல்லை மாநகராட்சியில்.
திமுகவில் இருக்கும் திருநெல்வேலி முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா மாநகராட்சி முதல் வார்டில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால், திருநெல்வேலி அதிமுக மாவட்ட செயலாளரும் மாலைராஜா அண்ணனுமான தச்சை கணேசராஜா, உடன்பிறப்புக்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்று நினைக்கிறாராம். அதனால் தச்சை கணேசராஜா இந்தமுறை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடவில்லை என்கிறார்கள்.
அதே போல, அதிமுக ஆட்சியில் துணை மேயராக இருந்த ஜெகநாதன் இந்த முறை தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள். அதேசமயம் அவரது அண்ணன் சுப்பிரமணியன் திமுக சார்பில் போட்டியிட இருக்கிறாராம்.
தவிர கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன், ஆர். பி. ஆதித்தன் உள்ளிட்ட பலரும் இந்த மாநகராட்சி தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள்.
முன்னாள் மேயர் விஜிலா சத்தியானந்த், மேயர் புவனேஸ்வரி, வசந்தி முருகேசன் எம்.பி. உள்ளிட்டோரும் திமுகவுக்கு தாவிவிட்டதால் திருநெல்வேலி மாநகராட்சியில் முக்கியமான நிர்வாகிகள் இல்லாத பட்சத்தில் புதியவர்கள் மட்டுமே போட்டியிட முன் வருவதால் அவர்களை தேர்வு செய்வதில் அதிமுக குழப்பத்தில் இருக்கிறது என்கிறார்கள்.