பாஜக-11,காங். -11, ஜனதாதளம்(எஸ்)-6, சுயேட்சை -1 : தனிப் பெரும்பான்மைக்கு போராட்டம்
பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சி தலா 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஜனதா தளம்(எஸ்) இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வெற்றிபெற்றுள்ளார். கர்நாடக மேல்சபையின் 25 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவு வெளியானதில் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கர்நாடக மேல்சபை 75 உறுப்பினர்களைக் கொண்டது. இதில் 25 தொகுதிகளில் உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் 5ம் தேதியுடன் நிறைவடைகிறது. கோலார், பெங்களூரு புறநகர், பெங்களூரு, மண்டியா, துமகூரு, ஹாசன், சிக்கமகளூரு, சிவமொக்கா, சித்ரதுர்கா, பல்லாரி, ராய்ச்சூர், உத்தர கன்னடா, கலபுரகி, பீதர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு தொகுதியும், மைசூரு, தட்சிண கன்னடா, தார்வார் , பெலகாவி, விஜயபுரா மாவட்டங்களில் தலா 2 தொகுதிகளிலும் ஆக மொத்தம் 25 இடங்கள் காலி ஆகின்றன.
இந்த இருபத்தி ஐந்து இடங்களுக்கு கடந்த 10ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 90 வேட்பாளர்கள் போட்டியிட்டு இருந்தார்கள். இந்த 90 வேட்பாளர்களில் ஒரு வேட்பாளர் மட்டுமே பெண் வேட்பாளர்.

ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா 20 தொகுதிகளிலும் , ஜனதா தளம் கட்சி 6 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 3 தொகுதிகளிலும் போட்டியிட்டு இருந்தன. சுயேட்சை வேட்பாளர்கள் 30 பேர் களத்தில் இறங்கி இருந்தனர். கடந்த 10ஆம் தேதி நடந்த தேர்தலில் 99.9 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
மேல்சபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. 25 தொகுதிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் ஆளும் பாஜக 11 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 11 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஜனதா தளம்(எஸ்) இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.
பெலகாவியில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கி கோளியின் இளைய சகோதரர் லகான் ஜார்கிகோளி வெற்றி பெற்றுள்ளார். பாஜக 11 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் மேல் சபையில் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் சுயேட்சை வேட்பாளர் லக்கி கோலி ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் ஆதரவு பாஜகவுக்கு கிடைத்தால் மேல் சபையில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்று தெரிகிறது.


