நான் கடவுளா? அண்ணாமலை கடவுளா? பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்திய ஆடியோ
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் திருமண விழாவிற்கு முன்னிலை வகிப்பதாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள் கட்சியினர். அந்த நிகழ்வின் போது பாமகவினர் 50க்கும் மேற்பட்டோரை அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைய வைக்க ஏற்பாடு செய்து வந்திருக்கிறார்கள். இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் கலிவரதனை செல்போனில் தொடர்பு கொண்டார் பாஜக மாவட்ட துணைத்தலைவர் ஜெயலட்சுமியின் கணவர் நாகப்பன்.
அப்போது, 20 பெண்கள் உள்பட பாமகவினர் 50க்கும் மேற்பட்டோரை திருமண விழாவிற்கு வரும் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைய வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று சொல்ல, அதற்கு கலிவரதன், ’’அண்ணாமலையும் வராது.. திருவண்ணாமலையில் வராது..’’ என்று கடுப்பாக சொல்ல ’’பசங்க ஆசைப்படுறாங்க..’’ என்கிறார் நாகப்பன்.
உடனே கலிவரதன், ‘’ அவங்க கேட்பதற்காக நாம செய்ய முடியாது பதவிக்கு மரியாதை கொடுங்க . நான் வந்தாதான் கட்சியில் சேரணும். அண்ணாமலை என்ன கடவுளா? உனக்கு நான் கடவுளா? அவர் கடவுளா? அப்புறம் ஏன் அண்ணாமலையை கூப்பிட்டு வா.. திருவண்ணாமலையை கூப்பிட்டு வான்னு சொல்லிக்கிட்டு உட்கார்ந்திருக்கீங்க. என் தலைமையில் கட்சியில் சேரச் சொல்லுங்க. என்னை விட பெரிய ஆளு யாரும் கிடையாது ’’என்று பேசியிருக்கிறார்.
இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.