ஸ்டாலின் தனி விமானத்தில் சென்றது ஏன்? அது அரசின் செலவா? கட்சியின் செலவா? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்காக அரசு முறை பயணமாக துபாய் சென்றார். அவர் இதற்காக தனி விமானம் மூலம் துபாய் சென்றார். ஆனால் அவருடன் அவரது மனைவி, மகன், மகள், மருமகள், மருமகன், பேரன்கள் என்று குடும்பத்தினர் அனைவரும் சென்றிருக்கிறார்கள்.
அரசுமுறைப் பயணம் என்று சொல்லிவிட்டு குடும்பத்தினருடன் முதல்வர் சென்றிருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் உட்கட்சி தேர்தல் பணிகளை பார்வையிட்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, முதல்வர் மு.க. ஸ்டாலின் துபாய் பயணம் குடும்ப சுற்றுலா போலிருக்கிறது . தனிப்பட்ட காரணங்களுக்காக புதிய தொழில் தொடங்க துபாய் சென்று இருப்பதாகவும் மக்கள் பேசுகின்றார்கள். துபாய் பயணம் தொழில் முதலீட்டை ஈர்க்கவா? அல்லது சுற்றுலாவா? என மக்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
அவர் மேலும், நான் முதலமைச்சராக இருந்த போது வெளிநாடு சென்றதை மு.க.ஸ்டாலின் அப்போது கடுமையாக விமர்சித்தார் என்றும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த கருத்துக்கு முதல்வர் ஸ்டாலின் உடன் துபாய் சென்ற அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்திருக்கிறார். அவர், முதலீடுகளை ஈர்க்க மட்டுமன்றி தமிழ்ச் சமுதாயத்தின் நலனுக்காகவே முதல்வர் துபாய் பயணம் மேற்கொண்டுள்ளார். விமான வசதி கிடைக்காததால் தான் தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கான செலவையும் திமுகதான் ஏற்கிறது. முதல்வர் சென்றது அரசு செலவில் அல்ல கட்சியின் செலவு என்று விளக்கம் அளித்திருக்கிறார்.