தண்ணீர் பாட்டில்கள் வீச்சு : தப்பித்த நாஞ்சில் சம்பத்

நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக பாஜகவினர் கருப்புக்கொடி காட்ட திரண்டதால், திமுகவினரும் நாஞ்சில் சம்பத்துக்கு ஆதரவாக திரண்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டன. போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து தப்பித்துச் சென்றார் நாஞ்சில் சம்பத்.
தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை அவதூறாக விமர்சித்திருந்தார் திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத். இதற்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் திமுக சார்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் நாஞ்சில் சம்பத் நடுவராக பங்கேற்றார். இதற்காக அவர் அறந்தாங்கியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். இதை அறிந்துகொண்ட பாஜகவினர், பாஜக பிரமுகர் ரமேஷ் தலைமையில் கருப்புக் கொடிகளுடன் நேற்று மாலை விடுதி முன்பாக திரண்டனர்.
இதை அறிந்த திமுகவினரும் அந்த பகுதியில் திரண்டு வந்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதல் ஏற்பட்டது. அப்போது விழாவில் பங்கேற்க செல்வதற்காக வெளியே வந்த நாஞ்சில் சம்பத்தை கண்டித்து அவருக்கு எதிராக முழக்கமிட்டு கருப்புக் கொடிகளை காட்டினர் பாஜகவினர்.
இதனால் பாஜக - அதிமுக இடையே மோதல் வலுத்தது. தண்ணீர் பாட்டில்கள் தூக்கி எறியப்பட்டன . இதில் பாஜகவைச் சேர்ந்த மகேஸ்வரிக்கு காயம் ஏற்பட்டது. நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்த போலீசார், நாஞ்சில் சம்பத்தை பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். போலீஸ் பாதுகாப்புடன் திமுகவினரும் அங்கிருந்து சென்று விட்டனர் . இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பாஜகவினர் 25 பேரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.