பெரியார் மண்ணில் கோட்சே ஆதரவாளருக்கு வெற்றி!
நான் கோட்சே ஆதரவாளர் என்று பகிரங்கமாக அறிவித்து பாஜக சார்பில் போட்டியிட்டு பெரியார் மண்ணில் வெற்றி வாகை சூடி இருக்கிறார் உமா ஆனந்த். பாஜக சென்னையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்ய பெரிய அளவில் அக்கட்சிக்கு வலு சேர்த்திருக்கிறார்.
சென்னை மாநகராட்சியின் 134 வது வார்டில் 12 பேர் களத்தில் இருந்தனர். அதிமுக சார்பில் அனுராதா பாலாஜியும், காங்கிரஸ் சார்பில் சுசீலா பாலகிருஷ்ணனும் போட்டியிட்டு இருந்த நிலையில், பாஜக சார்பில் உமா ஆனந்தன் போட்டியிட்டார். இவர் காங்கிரஸ் வேட்பாளரை விட 2036 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். உமா ஆனந்தன் 5559 வாக்குகள் பெற்று இருக்கிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 3503 வாக்குகளை பெற்றிருக்கிறார். இரண்டாயிரத்தி 695 வாக்குகள் பெற்று அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது தன்னை ஒரு கோட்சேவின் ஆதரவாளர் என்று சொல்லித்தான் பிரச்சாரம் மேற்கொண்டார். கோட்சே காந்தியை சுட்டார். ஆமாம், கோட்சே இந்து. அதனால்தான் பெருமையாக இருக்கிறது. நான் கோட்சேவின் ஆதரவாளர். கோட்சே தாமதமாக செய்தார். இன்னும் யாராவது ரோசமாக இருந்திருந்தால் முன்னாடியே யாராவது பண்ணியிருப்பாங்க என்று உமா ஆனந்தன் பேசியது பெரும் சர்ச்சையானது.
பிராமணர்கள்தான் உயர்ந்தவர்கள் என்றும் பிரச்சாரத்தில் உமா ஆனந்தன் பேசியது பெரும் சர்ச்சையானது. வலைத்தளங்களில் விவாதமானது.
வெளிப்படையாக இப்படி நான் கோட்சே ஆதரவாளர் என்றும், பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்றும் பேசும் ஒருவரை எப்படி பாஜக வேட்பாளராக தேர்வு செய்தது என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இதுபெரியார் மண். இந்த பெரியார் மண்ணில் கோட்சேவின் ஆதரவாளருக்கு வாய்ப்பில்லை என்றே எதிர்தரப்பினர் சொல்லி வந்தனர். ஆனாலும் உமா ஆனந்தன் வெற்றி பெற்றிருக்கிறார். அவரது வெற்றியை கொண்டாடி வருகிறது பாஜக. தலைநகரில் பாஜக முதல் வெற்றியை பதிவு செய்ததற்கு காரணமாக இருந்த உமா ஆனந்தனை கொண்டாடி வருகிறது பாஜக.