மூன்று பேரையும் தூக்கி எறிந்தால்தான் கட்சி உருப்படும் -எச்.ராஜா
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவினருக்கு புது உற்சாகத்தை கொடுத்திருக்கின்றன. இந்தநிலையில் பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் 35 ஆண்டுகளாக இரண்டாவது முறையாக எந்த கட்சியும் ஆட்சியைப் பிடித்தது கிடையாது. அந்த வரலாற்றை பாஜக மாற்றி அமைத்து சாதனை படைத்திருக்கிறது என்றார்.
தொடர்ந்து பேசிய எச்.ராஜா, ஜாதி மத அரசியலை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. முத்தலாக் சட்டம் கொண்டு வரப்பட்டதால் இஸ்லாமிய பெண்கள் அதிகமாக வாக்களித்து இருக்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் சமூக நீதி வழங்கியது பாஜக என்றார்.
பிரதமர் மோடிக்கு எதிராக பேசுவது மக்களிடம் எடுபடாது . தேர்தல் முடிவுகள் அதைத்தான் காட்டுகின்றன. பாஜகவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பதை 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன . இந்த தேர்தல் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் எச்சரிக்கை மணி அடித்து இருக்கிறார்கள் என்றவர் காங்கிரஸின் படுதோல்வி குறித்து, நேரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை தூக்கி எறிந்தால் தான் காங்கிரஸ் கட்சிக்கு இனி எதிர்காலம் உண்டு என்றார்.
மத்திய அரசின் வலிமைமிக்க தலைமையை கொச்சைப் படுத்துபவர்கள் தேசவிரோதிகள். நாட்டைக் காட்டிக்கொடுக்கும் தீய நோக்கம் கொண்டவர்கள் தான் மத்திய அரசு கைப்பற்றி பாரபட்சமான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள் என்று கடுமையாக தெரிவித்தார்.