திமுக வராததால் டீ செலவு மிச்சம் - அண்ணாமலை கமெண்ட்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை தமிழக அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதை புறக்கணிப்பதாக நேற்றைக்கு அறிவித்திருந்தது. நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வில்லை என்கிற போன்ற காரணங்களை பட்டியலிட்டு ஆளுநரின் விருதைப் புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருந்தது.
இதேபோன்று தமிழர் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைப்பது தமிழக தலைவர்களை கேலி செய்வது போன்று உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆளுநர் விருந்தில் பங்கேற்கவில்லை என்று அறிவித்துவிட்டார். இதையடுத்து ஆளும் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் ஆளுநர் விருதைப் புறக்கணிப்பதாக அறிவித்தன.
இதையடுத்து ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேனீர் விருந்தில் அதிமுக சார்பில் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், தளவாய்சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பாஜக சார்பில் துரைசாமி, கராத்தே தியாகராஜன் மற்றும் கரு. நாகராஜன், குஷ்பு ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். மத்திய அமைச்சர் எல்.முருகனும் இந்த தேனீர் விருந்தில் பங்கேற்று இருக்கிறார். பாமக சார்பில் எம்எல்ஏக்கள் சதாசிவம் , வெங்கடேஸ்வரன் ஆகியோர் பங்கேற்று இருக்கிறார்கள்.
ஆளுநரின் இந்த தேநீர் விருந்தில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு பங்கேற்கவில்லை. காவல்துறை தலைவர் சைலேந்திரபாபுவும் பங்கேற்கவில்லை.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியபோது, தேநீர் விருந்தை திமுக புறக்கணித்ததால் ஆளுநருக்கு டீ செலவு மிச்சம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுகவும் அதன் கூட்டணி கட்சியினரும் பங்கேற்காதது ஆளுநர் மாளிகைக்கு டீ செலவு மிச்சம் என்று தெரிவித்தார். ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்பி விளக்கம் கேட்டிருக்கிறார். இதனை வெள்ளை அறிக்கையாக வெளியிட திமுக தயாரா? என்று கேட்டவர், திமுக அரசு தயார் செய்து கொடுத்து ஆளுநர் உரையை அப்படியே ஆளுநர் படித்தார். அப்போது இருந்த மாண்பு மட்டும் இப்போது இல்லையா என்று கேட்டார் அண்ணாமலை.