அரசியலுக்காக மதக்கலவரத்தை தூண்டுவதா? தமிழக பாஜக இளைஞரணி தலைவருக்கு கண்டிப்பு

 
v

அரசியலுக்காக மதக்கலவரத்தை தூண்டுவதா என்று தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி. செல்வத்தை  நீதிமன்றம் கண்டித்து இருக்கிறது. 

 தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி. செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில்,   ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோவில்கள் இடிக்கப்படுவது தொடர்பாக பதிவிட்டிருந்தார்.  அவரது பதிவு உண்மைக்கு மாறான தகவலுடன் வதந்தியை பரப்பி இருபிரிவினரிடையே வெறுப்பையும் பகையையும் உருவாக்கி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

 கீழ்ப்பாக்கத்தைச்  சேர்ந்த இளங்கோவன் என்பவர் இந்த புகாரை அளித்திருந்தார் .    இந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு  போலீசார் வினோஜ் பி. செல்வம் மீது கழகத்தை ஏற்படுத்துதல்,  இரு சமூகத்தினரிடையே விரோதத்தை தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 

hi

  இதை அடுத்து பாஜகவினர் கொதித்தெழுந்தனர்.   செய்தித்தாள்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் தான் வினோஜ் பி. செல்வம் அந்தக் கருத்தை பதிவிட்டிருந்தார்.   அவர் பதிவு தவறு என்றால் அந்த செய்தியை வெளியிட்ட செய்தி நிறுவனம் மீதும் வழக்கு தொடருமா தமிழக காவல்துறை என்று தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியிருந்தார்.   இந்த விவகாரத்தில் வினோஜ் பி செல்வத்திற்கு பாஜக துணை நிற்கும் என்று தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

 வினோஜ் பி செல்வம்  தன்மீது தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது,   காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர்,  கோவில்கள் மட்டும் இடிக்கப்படுவதாக சொல்லி மதக்கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவு செய்திருப்பதாகவும் அரசியலுக்காக மதத்தை பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.   

 இதன் பின்னர் வழக்கு தொடர்பான ஆவணங்களையும் ட்விட்டர் பதிவுகளையும் தாக்கல் செய்ய  உத்தரவிட்ட நீதிபதி,  வழக்கு விசாரணையை பிப்ரவரி 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.