ஸ்டாலினுக்காக தயாராகும் தனி விமானம்!
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்காக தனி விமானம் தயாராகிக்கொண்டிருக்கிறது. முதல்வரான பின் மு. க. ஸ்டாலின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்பதால் மிகுந்த கவனத்துடன் பயணத்திற்கான ஏற்பாடுகள் தயாராகிக் கொண்டிருக்கிறது.
வரும் 25 மற்றும் 26ம் தேதி ஆகிய இரண்டு தினங்களில் அவர் துபாய் செல்கிறார். துபாயில் 192 நாடுகள் பங்கேற்பில் நடைபெற்று வரும் உலகத் தொழில் கண்காட்சியில் பங்கேற்று தமிழ்நாட்டுக்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறார்.
துபாய் எக்ஸ்போவில் இந்திய நாட்டின் சார்பில் தனி பெவிலியன் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களும் இந்த எக்ஸ்போவில் தங்கள் மாநிலத்தின் சிறப்புகள் தொழில் வாய்ப்புகள் கலாச்சாரங்களை உள்ளடக்கிய விளக்க காட்சிகளை காட்சிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தான் தமிழகத்தின் சிறப்பினை உலக நாடுகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் தமிழ் நாட்டின் சார்பிலும் ஒரு அரங்கினை துபாய் எக்ஸ்போவில் வைக்கலாம் என்று முதல்வர் முக. ஸ்டாலினிடம் தமிழக அரசுத்துறை அதிகாரிகள் ஆலோசனை கொடுத்துள்ளனர். முதல்வருக்கு அதற்கு சம்மதம் சொன்னதால் வரும் 24 ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு அரங்கு செயல்பட இருக்கிறது . இதற்கு தமிழ்நாடு பெவிலியன் என்று பெயர் சூட்டப்பட இருக்கிறது.
துபாய் செல்லும் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ்போவை பார்வையிடுகிறார். இதன்பின்னர் துபாய் தொழில் முனைவோருடன் கருத்தரங்கம் ஒன்றிலும் பங்கேற்கிறார் .அதன்பின்னர் உலகம் முழுவதிலுமிருந்து இந்த கண்காட்சியை காண வந்திருக்கும் தொழிலதிபர்களுடன் கலந்துபேசி தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்த இருக்கிறார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் துபாய் எக்ஸ்போவில் பங்கேற்பதால், முதல்வர் ஸ்டாலினோடு துறை சார்ந்த பல அமைச்சர்களும் அதிகாரிகளும் செல்கிறார்கள். முதல்வர் துபாய் பயணம் செல்வதற்காக தனி விமானம் தயாராகிக் கொண்டிருக்கிறது.
முதல்வர் துபாய் சென்றுவிட்டு அங்கிருந்தபடியே மருத்துவ பயணமாக லண்டன் செல்ல இருப்பதாக தகவல் பரவியிருந்த நிலையில் தற்போது அவர் லண்டன் செல்லவில்லை. துபாயில் எக்ஸ்போவில் பங்கேற்று விட்டு நேரடியாக தமிழகம் திரும்புகிறார் என்ற தகவல் அரசு வட்டாரத்தில் பரவுகிறது