மாஜி எம்.எல்.ஏ., எம்.பிக்களை புது எண்களுக்கு தாவ வைக்கும் சசிகலா!

 
sa

 கொங்கு மண்டலத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள்,  முன்னாள் எம்எல்ஏக்கள்,  முன்னாள் எம்பிக்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் தங்கள் செல்போன் எண்களை மாற்றி விட்டு புதிய எண்களை வாங்கி அதையும் தங்களுக்கு மிக மிக நெருக்கமானவர்களுக்கு  மட்டுமே கொடுத்து வருகிறார்களாம்.  சசிகலா ஏற்படுத்திய பீதியால் தான் இந்த நிலை என்கிறார்கள்.

 நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நிர்வாகிகள் சந்திப்பை முடித்திருக்கும் சசிகலா அடுத்து கொங்கு மண்டலத்தில் குறிப்பாக சேலத்தில் இருந்து சுற்று பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார்.   எடப்பாடி பழனிச்சாமி தொகுதியைச் சேர்ந்த சுரேஷ் மேற்பார்வையில் இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்து வருகிறார்களாம்.

saa

 சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், கோவை மாவட்ட அதிமுகவில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் அதிமுகவின் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் செல்போன் எண்களையும் அவர்களின் உதவியாளர்கள் எண்களையும் ஒரு பட்டியலிட்டு சசிகலாவிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  

 இந்த எண்களை வைத்துக் கொண்டு அவர்களை நலம் விசாரிக்கும் போர்வையில் அவர்களின் மனநிலையை மாற்றும் செயல்களில் ஈடுபட்டு இருக்கிறாராம்  சசிகலாவின் உறவினர்கள் உதவியாளர்கள்.   குறிப்பாக கொங்கு மண்டல சுற்றுப்பயணத்தின்போது சசிகலாவை சந்திக்க வருமாறும்,  அந்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்குமாறும் அவர்களிடம் பேசி வருகிறார்களாம்.

 சிலரிடம் பேசி வந்த தகவல் மற்றவர்களுக்கும் பரவ,  எங்கே நம்மிடமும் பேசி   அந்த தர்மசங்கடத்திற்கு ஆளாகி விட வேண்டும் என்று பலரும் தங்கள் செல்போன் எண்களை அவசர அவசரமாக மாற்றிவிட்டு புதிய எண்களை வாங்கி விட்டார்களாம்.  இந்த புதிய எண்களையும் மிகவும் நம்பகத் தன்மையான நெருக்கமானவர்களிடம்  மட்டுமே வழங்கி வருகிறார்களாம்.