ராகுல் போட்ட சவால் திமுகவுக்கு பெருமை - நெகிழ்ந்த உதயநிதி
ராகுல் காந்தி போட்ட சவால் திமுகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என்று தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின்.
திமுகவின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலி.ல் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
கடலூர் மாநகராட்சியில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார் . பிரச்சாரத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நீட்தேர்வு ரகசியத்தை நான் இப்போது சொல்கிறேன். அது என்னவென்றால் அதிமுகவை போல நாங்கள் பாஜகவிற்கு அடிமையாக இருக்க மாட்டோம். போராடி வெற்றி பெறுவோம் என்றார்.
மேலும் அது குறித்து பேசியபோது, நீட்தேர்வு விவகாரத்தில் அதிமுக பச்சை அயோக்கியத்தனம் செய்திருக்கிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது கூட அதிமுகவினர் மறைத்துவிட்டனர் என்றார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி, நாங்கள் அதிமுகவை போல கூவத்தூர் போய் சசிகலாவின் காலை பிடித்து ஆட்சி அமைக்கவில்லை. மக்களை சந்தித்து அவர்களிடம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறோம் என்று சொன்னவர், நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி தமிழகத்தில் திமுக இருக்கும் வரை உங்களால் எதுவும் செய்ய முடியாது என்று பிரதமர் மோடிக்கு சவால் விடுத்து இருக்கிறார். இது திமுகவிற்கும் தமிழ் நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என்று சொல்லிவிட்டு, அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் திமுக ஒரு சிம்ம சொப்பனமாக விளங்குகிறது என்று சொல்லி சிரித்தார்.