‘’எவன் வர்றான் பார்ப்போம்’’-வைரலாகும் சிசிடிவி காட்சிகள்
பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , பாஜக கரூர் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் ஆகியோரின் படங்களில் கருப்பு மை பூசி வைத்திருக்கிறார்கள் மர்மநபர்கள். சுவர் விளம்பரங்களில் மர்மநபர்கள் இப்படி செய்திருப்பது சிசிடிவியில் பதிவாகி இருக்கின்றன. இந்த சிசிடிவி காட்சிகள் இணையங்களில் வைரலாகி வருகின்றன. சுவர் விளம்பரங்களை அழிக்கும்போது, ‘’எவன் வர்றான் பார்ப்போம்’’ என்று இரண்டு பேர் தடியுடன் நிற்கிறார்கள்.
கரூர் மாவட்டத்தில் கோட்டாட்சியர் அலுவலகத்தின் சுற்றுச்சுவரில் திமுக, பாஜக கட்சிகள் சுவர் விளம்பரம் எழுதி வந்ததால் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கரூர் மாநகரத்தில் இருதரப்புக்கும் இடையே பரபரப்பு நிலவி வந்ததால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பினரையும் அமைதியாகச் செல்லும்படி அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
இதையடுத்து பாஜகவினர் விளம்பரத்தை அழித்து திமுகவினர் சுவர் விளம்பரம் எழுதியதாகவும், பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி பாஜக கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று பாஜகவினர் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள் பாதை பகுதியில் கரூர் மத்திய மாநகரத் தலைவர் கார்த்திகேயன் சார்பில் பிரதமர் மோடியின் பிறந்த நாள் அன்றைக்கு வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் புகைப்படம், மாவட்ட தலைவர் செந்தில்நாதன் புகைப்படங்களை கருப்பு மை பூசி அழித்திருக்கிறார்கள். அவர்கள் அழிக்கும் செயல் சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது. இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாஜகவின் சுவர் விளம்பரங்களை கருப்பு மை பூசி அழிக்கும் போது இரண்டு பேர் தடியுடன் நின்றுகொண்டு, ‘’எவன் வந்து தடுக்கிறான் பார்ப்போம்’’ என்று உறுமிக் கொண்டு நிற்கிறார்கள். இதுவும் சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.