பாஜக உட்கட்சி பூசலில் கொலைவெறி தாக்குதல்! சுய நினைவு திரும்பியவர் பரபரப்பு புகார்

 
ஜ்ப்


பாஜக உட்கட்சி தேர்தல் தொடர்பாக கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள மோதலில் கொலைவெறி தாக்குதல் நடந்து சுய நினைவை இழந்த ஒருவர்  தற்போது சுயநினைவு திரும்பி சிசிடிவி ஆதாரங்களுடன் போலீசில் பரபரப்பு புகார் அளித்திருக்கிறார்.

 கோவையில் ராமநாதபுரம் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்.  கோவை பாஜகவில் நெசவாளர் அணி செயலாளராக உள்ளார் ஜெயக்குமார். இவர் கோவை ராமநாதபுரம் பகுதியிலேயே ஜெ.பி. ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.

ஜ்ப்

பாஜகவில் உட்கட்சி  தேர்தல் நடைபெற இருப்பதால் ஜெயக்குமார் போட்டியிடக்கூடாது என்று சொல்லி பாஜகவை சேர்ந்த கார்த்திக், முத்துக்குட்டி ஆகியோர் ஜெ.பி. ஸ்டுடியோவுக்கு சென்று இருக்கிறார்கள். 

 கடந்த 30-ம் தேதி மாலையில் ஜெ.பி. ஸ்டூடியோவிற்கு சென்ற முத்துக்குட்டி,  கார்த்திக் உள்ளிட்ட நபர்கள் ஜெயக்குமாரை மிரட்டியதோடு அல்லாமல் அவரை கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறார்கள்.   இதில் படுகாயமடைந்த ஜெயக்குமாரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

 அங்கு சுய நினைவின்றி சிகிச்சை பெற்று வந்திருக்கிறார் ஜெயக்குமார்.  தற்போது அவருக்கு சுயநினைவு திரும்பி விட்டதை அடுத்து உட்கட்சி பிரச்சனையில் தன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பாஜகவினரையும்,  அவருடன் வந்த நபர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் கோவை ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.   இந்த விவகாரம் கோவை பாஜகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.