அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்கள் முடக்கம் -அமலாக்கத்துறை அதிரடி

 
ani

தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரின் 6.5 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.   இதை அமலாக்கத் துறை தெரிவித்திருக்கிறது.  

 கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை அதிமுக அமைச்சராக இருந்தபோது சேர்த்த சொத்துக்கள் தொடர்பாக தொடரப்பட்ட பண மோசடி வழக்கில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.

an

 ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் சொத்துகள் சேர்த்ததாக சொத்துக்குவிப்பு வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்தனர்.    இந்த வழக்கு அமலாக்கத் துறையின் விசாரணைக்கு சென்றது .   இது தொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட அவரது குடும்பத்தினர் 7 பேருக்கு ஆகஸ்ட் மாதம் சம்மன் அனுப்பியிருந்தது.

 இதையடுத்து தற்போது 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை முடக்கம் செய்திருக்கிறது அமலாக்கத்துறை.   இந்த அசையா சொத்துக்களின் மதிப்பு 6.5 கோடி ரூபாய் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.    

 தமிழக அமைச்சரின் சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.    திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.