எம்.முருகனா? எல்.முருகனா? - வாக்குச்சீட்டு குழப்பம் - கள்ள ஓட்டு சர்ச்சை

மத்திய இணை அமைச்சர் எல். முருகனின் வாக்கை கள்ள ஓட்டாக வேறு ஒருவர் போட்டு விட்டார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருக்கும் நிலையில். எல். முருகன் ஓட்டை யாரும் போடவில்லை. அவர் எப்போது வந்தாலும் தனது வாக்கை செலுத்தலாம் என்று விளக்கமளித்திருக்கிறார் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பழனிகுமார். எம். முருகனுக்கு பதிலாக எல்.முருகனின் வாக்குச்சீட்டு கொடுக்கப்பட்டதால் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கிறது என்றும் அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி முதற்கட்ட விசாரணை நடத்துவார் என்றும் கூறியிருக்கிறார்.
சென்னை அண்ணாநகர் வாக்குச்சாவடியில் மத்திய அமைச்சர் எல். முருகனின் ஓட்டை வேறு ஒருவர் செலுத்தியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ’’மத்திய அமைச்சர் எல். முருகனின் வாக்கு சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடியில் வேறு ஒரு நபரால் கள்ள வாக்காக போடப்பட்டுவிட்டது. மாநில தேர்தல் ஆணையர் இப்போதாவது நடவடிக்கை எடுப்பாரா?’’ என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
அவர் மேலும், ‘’ அரசு இயந்திரங்கள் எந்த அளவிற்கு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக கோவையில் வாக்குச்சாவடியின் வாசலில் பண விநியோகம் செய்கின்றனர். ஆளுங்கட்சிக்கு சாதகமாக பல இடங்களில் வாக்குப்பதிவும் நிறுத்தப்பட்டு வருகிறது’’ என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
ஆனால், வாக்குச்சீட்டு மாறிய குழப்பத்தால் நடந்ததை தவறுதலாக அண்ணாமலை டுவிட் செய்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. எம். முருகனுக்கு பதிலாக எல்.முருகனின் வாக்குச்சீட்டு கொடுக்கப்பட்டதால் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. மற்றபடி, எல். முருகன் எப்போது வந்தாலும் தனது வாக்கை செலுத்தலாம் என்று விளக்கமளித்திருக்கிறார் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பழனிகுமார்.