ஏ.ஆர்.ரகுமான் பெயர் தமிழா? அவர் சொன்னது மோட்டிவேசனுக்காக; ஆனால் இளையராஜா சொன்னது இயல்பு! - எச்.ராஜா ஆவேசம்
தமிழ்தான் இணைப்பு மொழி என்று சொன்னதால் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக சொன்னதால் இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமானை கொண்டாடி வருகின்றனர். அதேநேரம் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியதால் இசையமைப்பாளர் இளையராஜாவை கடுமையாக சாடி வருகின்றனர். இதற்காக பாஜகவின் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர் எல்.முருகன் , ஆளுநர் தமிழிசை உள்பட பலரும் இளையராஜாவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா இளையராஜாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து ஏ.ஆர். ரகுமானுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜாவிடம், இளையராஜா விவகாரம் குறித்தும் ஏ.ஆர் ரகுமான் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எச். ராஜா, ’’இளையராஜா தனது கருத்தை கருத்து சொல்ல அதிகாரம் இருக்கிறது. ஆனால் திராவிடியன் ஸ்டாக் தான் நினைக்கின்ற கருத்தை தான் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டுமென நினைக்கின்றது. பிரதமர் மோடி மீது தமிழ்நாட்டில் வெறுப்புணர்வை பரப்புகிறார்கள். இளையராஜாவின் கருத்து இதை மாற்றி விடும் என்பதால்தான் அவரை இழிவு படுத்துகிறார்கள்’’ என்றார்.
தொடர்ந்து அது குறித்து பேசிய எச். ராஜா, ’’ஏ. ஆர். ரகுமான் என்கிற பெயர் தமிழா?’’ என்ற கேட்டவர், ‘’ மோடி பற்றி இளையராஜா சொன்னது இயல்பான கருத்து. ஆனால் ரகுமான் இணைப்பு மொழி குறித்து சொன்னது மோட்டிவேஷன் காரணமாகத்தான்’’ என்றார்.
திராவிடர் விவகாரம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, ’’ திராவிடம் என்பது இனா? இடமா?’’ என்ற கேள்வியை எழுப்பிவிட்டு, ‘’ நானும் திராவிடன் தான். குஜராத் கூட திராவிட பிரதேசம்தான். பிரதமரே திராவிடர் தான். எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணாமலை அனைவருமே திராவிடர்கள் தான். திராவிடர்கள் தான் தமிழ்நாட்டை ஆள்வார்கள்’’ என்றார் தடாலடியாக.