சசிகலா வழக்கில் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல்

 
ssi

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபோது அவருக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததாகவும் அதற்காக சிறை அதிகாரிகள் சிலர் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டியிருந்தார்.

   இதையடுத்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினைகுமார் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட கமிட்டி சசிகலா சிறையில் இருந்தபோது அவருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப் பட்டது உண்மைதான் என்று அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

p

 இதுகுறித்து சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா தொடர்ந்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை அமர்வு முன்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.   இதன்பின்னர் சசிகலாவிடம் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அப்போதைய சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் , தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி அனுமதி வழங்கியது.

 இதையடுத்து இந்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது .   அரசு தரப்பில் வழக்கறிஞர் மன்மோகன் ஆஜராகி வாதிட்ட போது ,  இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு அனுமதி அளித்திருக்கிறது என்று சொன்னார்.    இதன்பின்னர்,   தேதி குறிப்பிடாமல் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.   இதன் பின்னர் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை துவங்குகிறது.