இரட்டை இலை வழக்கில் பரபரப்பு! விசாரணைக்கு பயந்து வழக்கறிஞர் தற்கொலை

 
gஒபி

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணைக்குப் பயந்து வழக்கறிஞர் கோபிநாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவேற்காட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டிடிவி தினகரன் தரப்பினர் லஞ்சம் கொடுத்ததாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகேஷ் சந்திரா என்பவரை கடந்த 2017ஆம் ஆண்டு கைது செய்து விசாரணை நடத்தியது.   இந்த விவகாரத்தில் சென்னை ராமாபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் மோகன்ராஜ் என்பவரையும் அமலாக்கத்துறை குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.

சு

 மோகன்ராஜின் ஜூனியர் என்பதால் வழக்கறிஞர் கோபிநாத் வீட்டிலும் 2017ஆம் ஆண்டில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்துள்ளனர்.  சென்னையை அடுத்த திருவேற்காடு சுந்தரசோழ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கோபிநாத்.   இவர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்துள்ளார்.

 இந்த நிலையில் வழக்கறிஞர் கோபிநாத்தை நேற்று மாலை செல்போனில் தொடர்பு கொண்ட அமலாக்கத் துறையினர்,  விசாரணைக்காக டெல்லிக்கு வருமாறு தகவல் சொல்லி இருக்கிறார்கள்.    இதனால் மன உளைச்சலில்  இருந்திருக்கிறார் கோபிநாத்.    நேற்று இரவு தூங்க செல்வதாக சொல்லிவிட்டு வீட்டிற்கு எதிரில் இருந்த குடைசைப்பகுதிக்கு சென்றிருக்கிறார்.   இன்று காலையில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்திருக்கிறார்.

 இதைப் பார்த்து பதறிய அவரது தங்கை கொடுத்த தகவலின்படி திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோபிநாத் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர் .   

அமலாக்கத் துறையினர் விசாரணைக்கு அழைத்ததை  அடுத்து மன உளைச்சலில் இருந்ததால் தான் கோபிநாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்  உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.