தேர்தல் புறக்கணிப்பு -வந்தவாசி நகராட்சி 22 வது வார்டு மக்கள் அதிரடி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருக்கும் நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி நகராட்சி 22வது வார்டு மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்து அறிவித்திருக்கின்றனர் .
வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 22 வது வார்டில் கெஜலட்சுமி நகர் முதல் தெரு மற்றும் அகிலாண்டேஸ்வரி தெரு விரிவு குடியிருப்போர் அனைத்து வாக்காளர்களும் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலைப் புறக்கணிப்பது என்று ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். தங்களின் பல ஆண்டுகள் கோரிக்கைகள் நிறைவேறாமல் உள்ளன . அதனால் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதற்காக அப்பகுதி மக்கள் வைத்திருக்கும் பதாகையில் அவர்களின் கோரிக்கைகளை தெரிவித்திருக்கின்றனர் . மொத்தம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இருக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
அப்பாவு முதலி தெருவில் முன்பகுதியில் தனிநபர் ஒருவர் தெருவில் சொந்தம் கொண்டாடிக் கொண்டு மழைநீர் கால்வாய் சாலை வசதி ஏற்படுத்த தடையாக 15 ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகத்தின் பெயரில் வழக்கு நடத்திக்கொண்டிருக்கிறார், கெஜலட்சுமி நகர் அப்பாவு முதலி தெரு மற்றும் அகிலாண்டேஸ்வரி தெரு பிரிவு அனைத்து வாக்காளர்களாக உள்ள நபர்கள் முறைப்படி 30 ஆண்டுகளாக நகராட்சி அனுமதி பெற்று குடியிருப்பு கட்டி வீட்டுவசதி வரி, குடிநீர் வரி செலுத்தி வருகிறோம். அந்தத் தெருவின் நடுவே என் மனை உள்ளது என்று சொந்தம் கொண்டாடும் நபர் இந்த இடம் எனக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்றும் கூறிவருகிறார், நகராட்சி நிர்வாகமே! வருவாய்த்துறையே! தெருவை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எந்த தடையுமில்லை என்று வாக்காளர்களுக்கு உறுதிசெய்! இதற்கு முன் இந்த வார்டில் வெற்றி பெற்ற நகர மன்ற உறுப்பினர்களும் இந்த வழி பிரச்சனையை எவரும் கண்டுகொள்ளவில்லை. மீண்டும் வாக்கு கேட்டு வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 22 வது வார்டு மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.