திமுக கோஷ்டி பூசல் -கனிமொழியின் ஆதரவாளர் மீது கொடூர தாக்குதல்

 
kk

வெற்றிக் கொண்டாட்டத்திற்காக நடந்த பிரியாணி விருந்தில் கனிமொழியின் ஆதரவாளர் மீது கொடூர தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.  தேர்தல் முன் விரோதத்தால் இந்த தாக்குதல் நடந்துள்ளது.   திமுகவின் இந்த கோஷ்டி பூசலால் தூத்துக்குடியில் திமுகவினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார் திருநகரி பேரூராட்சியில் 9வது வார்டில் திமுகவைச் சேர்ந்த அகமது காதர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.   அவர் பேரூராட்சி கவுன்சிலராக பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார்.   வெற்றியைக் கொண்டாடும் வகையில் திமுகவைச் சேர்ந்த தனது நண்பர் ராகவன் பொன் கனகராஜ் உள்ளிட்ட ஆதரவாளர்களுக்கு நெல்லை மாவட்டம் கேடிசி நகரில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் வைத்து விருந்து வைத்திருக்கிறார்.  

kkk

 அப்போது அனைவரும் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென்று அங்கு தூத்துக்குடி மாவட்ட திமுக நிர்வாகி விபிஆர். விஜயன் தனது ஆதரவாளர்களுடன் சென்று,  அகமது காதர் தரப்பினருடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.   இதனால் விபிஆர் விஜயன் தரப்பினருக்கும் அகமது காதர் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியிருக்கிறது.  அப்போது பிரியாணி தட்டை எடுத்து ராகவன் பொன் கனகராஜ் மீது வீசி, பிரியாணி தட்டினால் கடுமையாக தாக்கியிருக்கிறார்கள்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   ராகவன் பொன் கனகராஜ் முகத்தில் 12 தையல்கள் போடப்பட்டு இருக்கிறது.   இதேபோல் அகமது காதர்  கவுன்சிலருக்கும்  காயம் ஏற்பட்டிருக்கிறது.

tt

 நடந்த சம்பவம் குறித்து அகமது காதர்,  ‘’ அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்களான விஜயனுக்கும் கனிமொழி எம்பி ஆதரவாளரான ராகவன் பொன் கனகராஜுக்கும் இடையே நீண்ட நாட்களாகவே முன்விரோதம் இருந்து வருகிறது.   என்னையும் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட கூடாது என்று விஜயன் தரப்பினர் மிரட்டி வந்தார்கள்.    ஆனால் நான் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறேன்.   இந்த நிலையில்தான்  நாங்கள் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது விஜயன் தரப்பினர் ராகவன்  முகத்தில் தாக்கினார்கள்.    போலீசார் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தெரிவித்துள்ளார்.

 தேர்தல் காரணமாக திமுக நிர்வாகியை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே கொடூரமாக தாக்கிய சம்பவம் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.