பாஜக ஐடி பிரிவுத் தலைவர் நிர்மல் குமார் மீது சைபர் க்ரைம் வழக்கு
தமிழக பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதை அடுத்து வரும் 8ம் தேதி அன்று அவர் சைபர் கிரைம் போலீசார் முன்பு நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
பாஜகவின் நிர்வாகிகளும் பாஜகவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் இயங்கி வருபவர்களும் அடுத்தடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைதாகி வருகின்றனர். பாஜகவுக்கு ஆதரவாக வலைத் தளத்தில் இயங்கி வருபவர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அண்மையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் துபாய் சென்றிருந்த போது அவர் அணிந்து இருந்த ஜாக்கெட், கூலிங் ஜாக்கெட் என்றும் அது 17 கோடி ரூபாய் என்றும், அந்த தகவலை தமிழ்நாடு நிதியமைச்சர் பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியீட்டு இருந்ததாகவும், அது குறித்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியே வந்ததாகவும் , ஒரு போலிச் செய்தி பரவ அதை தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் கோவை பாஜக நிர்வாகி அருள் ராஜ்.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார் . இதற்கு முன்பாக பாஜகவின் இளைஞர் பிரிவு தலைவர் வினோத் பி. செல்வம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அருள்ராஜ் கைதின்போது, பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு காவல் துறையின் புதிய சமூக ஊடக மையத்திற்கு இது முதல் சமர்ப்பிப்பாக இருக்கலாம். வடிகட்டப்பட்ட முட்டாள் இதுபோன்ற முட்டாள் தனத்தை வெளிப்படையாக இடுகை இடுவதால் ஏற்படும் அபாயங்களை புரிந்துகொள்ளவில்லை. சங்கிகள் வாட்ஸ்அப் விஷயத்தை தாண்டிச் செல்லக்கூடாது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தமிழக பாஜகவினர் ஐடி பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். வழக்கு விசாரணைக்கு ஆஜராக நிர்மல் குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது. குற்றவியல் தண்டனை சட்டத்தின் பிரிவு 41ஏ என்கிற பிரிவில் நிர்மல் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தால் வாரன்ட் இல்லாமல் ஒருவரை கைது செய்ய முடியும். மேலும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 153 மற்றும் 505 (ஐ)(பி), தகவல் தொடர்புச் சட்டத்தின் பிரிவு 66 டி பிரிவுகளின் கீழும் நிர்மல் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து நிர்மல்குமார், ’’கடந்த திங்கட்கிழமை அன்று எனக்கு நோட்டிஸ் வந்து இருக்கிறது. அந்த நோட்டீசில் நான் என்ன குற்றம் செய்தேன் என்பது தொடர்பாக தெளிவாக எதுவும் இல்லை. ஆனால் என் மீது தகவல் தொடர்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக நான் வரும் 8ஆம் தேதியன்று காவல்துறை முன்பாக ஆஜராக வேண்டும் எனவும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது’’ என்று கூறியிருக்கிறார்.