தைரியமில்லாத பழனிச்சாமி - கடுமையாக சாடிய கனிமொழி
உள்ளாட்சித் தேர்தலை நடத்த தைரியமில்லாத பழனிச்சாமி அரசு எப்படி உள்ளாட்சியில் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பினார் கனிமொழி.
நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக மாநில மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
நெல்லையில் மேலப்பாளையம் பஜார் திடலில் நடந்த பிரச்சாரத்தின் போது பேசிய கனிமொழி , உள்ளாட்சி தேர்தல் என்பது சட்டமன்ற தேர்தலை விட பாராளுமன்றத் தேர்தலை விட மிக முக்கியமானது. இதற்கு காரணம் உள்ளாட்சி பிரதிநிதிகள் தான். அவர்கள்தான் அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருந்து மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்கள் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். ஆகவே உள்ளாட்சி பிரதிநிதிகளை சரியானவர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி தேர்ந்தெடுத்தால் தான் உள்ளாட்சியில் நல்லாட்சி தொடரும் என்றார்.
தொடர்ந்து பேசிய கனிமொழி , முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளாட்சியில் சிறப்பாக அதிமுக அரசு செயல்பட்டு வந்ததாக சொல்லி வருகிறார். உள்ளாட்சித் தேர்தலை நடத்த தைரியமில்லாத பழனிச்சாமி அரசு எப்படி சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பினார். அவர் மேலும், 10 ஆண்டுகள் ஆட்சியில் ஊழல் நடந்திருக்கிறது. அதுபோன்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் சொல்லப்பட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
தென் தமிழகத்திற்கு முக்கியத்துவம் அளித்து தொழில்கள் தொடங்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்திருக்கிறார். ஆனால் எதுவுமே செய்யாத எடப்பாடிபழனிசாமியை மக்கள் மறக்கமாட்டார்கள். மன்னிக்கவோ மாட்டார்கள். அவருக்கு திமுக ஆட்சியைப் பற்றி குறை சொல்ல எந்த தகுதியும் இல்லை என்று கடுமையாக விமர்சித்தார்.