பாஜக தமிழகத்தை ஆள முடியாது! அதிமுகவுக்கு தலைமை கிடையாது! செல்லூர்ராஜூ தடாலடி

திமுக ஆட்சி மீது மக்களுக்கு இருந்த விரக்தியால் தான் அதிமுக தோற்றது என்று தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கே.கே. நகரில் உள்ள எம்ஜிஆர் சிலை மற்றும் ஜெயலலிதா சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் தோல்வி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணபலம் , கூட்டணி பலம் , அதிகார பலம் ஆகியவற்றினால் திமுக வென்றது என்றார்.
தொடர்ந்து அது குறித்து பேசிய செல்லூர் ராஜூ, ஜெயலலிதா இல்லாமல் முதல் முறையாக அதிமுக தனித்து தலைமை கண்டது. அதிமுகவில் தலைமையே கிடையாது .இப்போது இருப்பவர்களை கட்சியை வழிநடத்த நாங்கள் உருவாக்கி வைத்திருக்கிறோம் என்றார்.
அதிமுகவின் தோல்வி குறித்து மேலும் பேசியபோது, அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து பேசி முடிவு எடுப்போம். ஆனால், தோல்வியினால் அதிமுக வாக்கு வங்கி குறையவில்லை. வாக்களிக்க வேண்டிய மக்கள் வாக்களிக்க வரவில்லை. திமுக ஆட்சி மீது உள்ள விரக்தியால் தான் மக்கள் முழுமையாக வாக்களிக்கவில்லை . வாக்களிக்க வேண்டிய மக்கள் வாக்களிக்காததால்தான் அதிமுக தோற்றது என்று தெரிவித்தார்.
அதிமுக படுதோல்வி அடைந்து உள்ளதால் அக்கட்சி திமுகவில் இணைந்து விடும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, திமுகதான் அதிமுகவில் இணையும் என்றார்.
பாஜக மூன்றாவது கட்சியாக தமிழகத்தில் வளர்ந்திருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொல்லியிருப்பது குறித்த கேள்விக்கு, அது எப்போதும் வளரும் கட்சிதான். அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். ஆனால் தமிழகத்தில் திமுக. அதிமுகதான் ஆட்சி செய்யும் . மாற்று கட்சியினர் யாராலும் ஆள முடியாது என்றார்.