அல்லிநகரம் நகராட்சி தலைவியின் ஆடியோ-தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம்
அல்லிநகரம் நகராட்சி தலைவியின் ஆடியோவுக்கு தேனி மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம் அளித்திருக்கிறார்.
தேனி மாவட்டத்தில் அல்லிநகரம் நகராட்சி தலைவி ரேணுப்பிரியாவும், திமுக கவுன்சிலர் சந்திரகலா ஈஸ்வரியும் பேசிய ஆடியோ மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த ஆடியோவில் நகராட்சித் தலைவர் ரேணுப்பிரியா, சந்திரகலா ஈஸ்வரியிடம் பேசுகிறார். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து இருப்பதாகவும், கவுன்சிலர்களுக்கு தர வேண்டிய பணம் அனைத்தையும் மாவட்ட செயலாளரிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும் சொல்கிறார். மேலும் , பணத்தை செலவு செய்த பின்னர் கணவரை கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள். என் நிலைமை என்னவாகும் என்று தெரியவில்லை என புலம்பியிருக்கிறார்.
இந்த ஆடியோ தேனி மாவட்ட திமுகவினர் இடையே வைரலாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தேனி மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்திருக்கிறார்.
அவர்கள் பேசியது போல் எந்த பணமும் மாவட்ட செயலாளரான என்னிடம் கொடுக்கப்படவில்லை . ஆடியோ விவகாரத்தில் இருவர் மீதும் கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும், திமுக சார்பில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவியில் இன்னும் தலைமை கழகத்தின் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது . அந்த பேச்சுவார்த்தை முடியும் வரை தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட ரேணுபிரியாவே நகராட்சித் தலைவராக தொடருவார் என்று தெரிவித்திருக்கிறார்.