பயந்துகொண்டு பிரச்சாரத்திற்கு வரலையா? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற உதயநிதி ஸ்டாலினை, சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கொடுத்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்டு மக்கள் வருத்தெடுத்தார்கள். இந்த நிலையில்தான் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு செல்லாமல் காணொளி மூலமாக பிரச்சாரம் செய்தார்.
நேரில் பிரச்சாரத்திற்கு சென்றால் மக்கள் கேள்வி கேட்பார்கள் என்று பயந்து கொண்டுதான் முதல்வர் நேரில் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் , மக்களை சந்திக்க வர தைரியம் இல்லை என்று சிலர் என்னைப் பார்த்துச் சொன்னார்கள். தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களை பார்க்கவில்லை என்று என்னை பார்த்து சிலர் சொல்கிறார்கள். அதற்கு காரணம் என்ன தெரியுமா? கொரோனா தொற்று காரணமாக சில விதிமுறைகளை அரசு அறிவித்திருக்கிறது. அதனால்தான் நான் நேரில் செல்லவில்லை. அதே சமயம் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு மாவட்டம் தோறும் வெற்றி விழா கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறேன். நான் பேசிய அனைத்து கூட்டங்களிலும் சொன்னேன் தேர்தல் முடிந்து அதன் வெற்றி விழா நடக்கும் போது நிச்சயமாக உறுதியாக அனைத்து மாவட்டங்களுக்கும் நானே நேரடியாக வருவேன் என்று சொல்லியிருக்கிறேன் என்றார்.
திமுக துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலையின் மகன் கதிரவன் -சந்தியா பிரசாத் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய போதுதான் முதல்வர் மேற்கண்ட விளக்கம் அளித்தார்.
கொரோனா காரணமாக பிரச்சாரத்திற்கு நேரில் செல்லவில்லை என்று முதல்வர் சொல்லி இருப்பதற்கு, கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கூட கொரோனா நடவடிக்கைகள் இருந்தது. ஆனால் அப்போது தமிழகமெங்கும் சுற்றி பிரச்சாரம் செய்தாரே ஸ்டாலின் என்று எதிர் தரப்பினர் ஆரம்பித்துவிட்டார்கள்.