ஊழல் வழக்கில் உடன்பாடு - செந்தில்பாலாஜிக்கு நோட்டீஸ்

 
sb

அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான வழக்கினை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

 அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி.  அப்போது அவர் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக சொல்லி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்துவிட்டதாக புகார்கள் குவிந்தன.    இந்த புகார்களின் அடிப்படையில் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.   

se

 அந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று  வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.   கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது,   காணொலிக் காட்சி மூலம் ஆஜராகியிருந்த புகார்தாரர்கள் பணத்தை திருப்பி பெற்றுக் கொண்டதாக தெரிவித்தனர்.  

 இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி நிர்மல்குமார்,   வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.  உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு  இடைக்கால தடை கோரி சேலத்தைச் சேர்ந்த தர்மராஜ் உச்சநீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதியன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி .ரமணா தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.   அப்போது மனுதாரர் தர்மராஜ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே. விஸ்வநாதன்,   சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பணம் வாங்கியதையும் கொடுத்ததையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.    ஆனாலும் இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்திற்கு அனுப்பாமல் ரத்து செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.

su

 அரசு ஊழியர் தொடர்புடைய ஊழல் லஞ்ச வழக்குகளில் உடன்பாடு எட்டிய பின்னர்,  அந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று வாதிட்டார்.  இதையடுத்து அந்த மேல்முறையீட்டு மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,   எதிர் மனுதாரரான பி. சண்முகம்,  அருள்மணி,  தமிழக அரசு அதாவது சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.   மேலும் வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 1ஆம் தேதிக்கு தள்ளி  தள்ளி வைத்துள்ளனர்.