“அதிமுக அரசு ஆண்மையான அரசு; எங்களை உரசிப் பார்க்க கூடாது” : ஹெச். ராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இதற்கு நீதிமன்றமும் ஒப்புதல் அளித்த நிலையில் கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட மாநில அரசு அனுமதி வழங்கியது. இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, “கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு” என்று சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டார்.
கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு.
— H Raja (@HRajaBJP) August 19, 2020
இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், “தமிழக அதிமுக அரசு ஆண்மையான அரசு. ஹெச். ராஜா சொன்ன சொற்கள் அவருக்கு தான் பொருந்தும். அதிமுகவினரை ஹெச். ராஜா உரசிப் பார்க்க கூடாது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டின் முன் கடந்த காலத்தில் காத்துக்கிடந்தது யார் என அனைவருக்கும் தெரியும்.
ட்விட்டரில் ஒரு கருத்தை போட்டு விட்டு பின் தனது அட்மின் தான் போட்டது என பல்டி அடித்தார் ஹெச். ராஜா. பொதுவெளியில் ஒன்று பேசிவிட்டு நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ஹெச். ராஜா எங்களை பற்றி பேச தகுதியில்லாதவர்” என்றார்.