இவர்கள் மட்டும்தான் இங்கு வரவேண்டும் - எச்சரிக்கை போஸ்டரால் சர்ச்சை
இவர்கள் மட்டுமே இங்கு வரவேண்டும் இவர்கள் அல்லாதோர் இங்கு வரக்கூடாது . எல்லோரும் வந்து போவதற்கு இது ஒன்றும் பிக்னிக் ஸ்பாட் அல்ல என்று ஒட்டப்பட்டிருக்கும் எச்சரிக்கை போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது .
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கை நதிக்கரையில் அமைந்திருக்கிறது வாரணாசி. இப்பகுதியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரியமிக்க கோயில்கள் உள்ளன . பழமையான கட்டிடங்களுக்கும் புகழ்பெற்ற நகரமாகவும் வாரணாசி விளங்குகிறது. இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முதல் பல்வேறு தரப்பினரும் இந்த அழகை கண்டு ரசிப்பதற்காக வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் இந்துக்கள் மட்டுமே வாரணாசிக்கு வரவேண்டும். அவர்கள் அல்லாதோர் யாரும் வாரணாசியில் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்ற வாசகத்துடன் வாரணாசி நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது.
இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்த போஸ்டர்களை ஒட்டிய விசுவ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் இந்த போஸ்டர்கள் மூலம் வாரணாசி பிக்னிக் ஸ்பாட் அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறோம் என்கிறார்கள்.
மேலும், கலாச்சாரத்தின் சின்னம் வாரணாசி என்பதால் இந்துக்களைத் தவிர வேறு யாரும் இங்கு உள்ள கோவில்களுக்கு வரக்கூடாது. இது வேண்டுகோள் அல்ல இது ஒரு எச்சரிக்கை என்று தெரிவித்திருக்கிறார்கள். வாரணாசி நகரம் முழுவதும் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களும் இந்து அமைப்புகள் விடுத்திருக்கும் எச்சரிக்கையும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது . இதனால் பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.