மன்னிப்பு கேட்ட சித்தார்த் : இருமாநில டிஜிபிக்களின் நடவடிக்கைகளில் இருந்து தப்புவாரா?
பிரச்சனை வலுத்து வரும் நிலையில், நாலாபுறமும் நெருக்கடி அதிகரித்து வரும் இக்கட்டான நிலையில் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் நடிகர் சித்தார்த். ஆனால், இருமாநில டிஜிபிக்களின் நடவடிக்கைகளில் இருந்து தப்புவாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் எதிராக தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை சொல்லி வருகிறார் நடிகர் சித்தார்த். இந்த வகையில் பிரதமர் மோடிக்கு ஆதரவான கருத்தை சொன்னேன் சொன்ன இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து ஆபாசமாக கருத்து கூறியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. நாட்டுக்காக விளையாடி பதக்கங்களை வென்று கொடுத்த சாய்னா நேவால் குறித்து மிகவும் ஆபாசமாக டுவிட் செய்துவிட்டார் சித்தார்த் என்று பலரும் கொந்தளித்து வருகின்றனர்.
கடந்த 5ஆம் தேதி அன்று பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற இருந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடியை போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்து தடுத்துவிட்டனர். இந்த பாதுகாப்பு குளறுபடி குறித்து பெரும் விவாதங்களும் விசாரணைகளும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், பிரதமரின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக போராட்டக்காரர்களின் செயல்பாடு இருந்தது என்று சாய்னா நேவால் கண்டனம் தெரிவித்திருந்தார். சாய்னா நேவால் பிரதமருக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கும் நிலையில் அதனை தொடர்ந்து விமர்சித்து வரும் நடிகர் சித்தார்த், சாய்னா நேவாலை கொச்சைப்படுத்தும் விதமாக தனது டுவிட்டரில் பதிவு செய்து இருந்தார்.
இதையடுத்து சித்தார்த்தின் கருத்துக்கு கண்டனம் வலுத்து வருகிறது. தேசிய மகளிர் ஆணையம் சார்பில் மகாராஷ்டிரா காவல்துறை டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. நிலைமை விபரீதமாகவை உணர்ந்த சித்தார்த், தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று சமாளிக்க முயன்றார். ஆனால் சமாளிப்பு தேவையில்லை மன்னிப்பு வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.
தேசிய மகளிர் ஆணையர் ரேகா சர்மா, சித்தார்த் இப்படி செய்வது இது முதல் முறை அல்ல தொடர்ந்து செய்து வருகிறார் என்று குற்றம் சாட்டி இருக்கிறார். அவர் இனிமேல் பேசவே கூடாது. அந்த அளவிற்கு அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
Dear @NSaina pic.twitter.com/plkqxVKVxY
— Siddharth (@Actor_Siddharth) January 11, 2022
தமிழ்நாடு டிஜிபி மட்டுமல்லாது மகாராஷ்டிரா மாநில டிஜிபிக்கு புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே சித்தார்த்திற்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது.
தமிழக பாஜவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதியும், இந்த நபர் ஒரு தொடர் குற்றவாளி. அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
இந்த நிலையில், நடிகர் சித்தார்த், ’’கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நீங்கள் பதிவிட்ட ட்விட்டிற்கு நான் பதிவிட்டு டுவிட்டிற்கு மன்னிப்பு கேட்கின்றேன். நகைச்சுவை பொறுத்தவரையிலும் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அது நகைச்சுவை அல்ல. சரியாக புரிந்து கொள்ள முடியாத படியாக நான் பதிவிட்ட நகைச்சுவைக்கு மன்னிப்பு கேட்கின்றேன். மேலும், இந்த விவகாரத்தினை இத்துடன் விட்டு விட்டு எனது கருத்தை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் எப்போதும் என்னை பொருத்தவரைக்கும் வெற்றியாளர் தான்’’ என்று பதிவிட்டிருக்கிறார்.
சித்தார்த் மன்னிப்பு கேட்டாலும், இருமாநில டிஜிபிக்களின் நடவடிக்கைகளில் இருந்து தப்புவாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.